ADDED : ஜன 03, 2024 11:50 PM
சேலம்,:''தமிழகத்தில் மருந்து வியாபாரிகளின் மீது நடக்கும் தாக்குதலை, அரசு தடுக்க வேண்டும்,'' என, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க பொதுச்செயலர் செல்வன் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
சமீப காலமாக தமிழகத்தில் சமூக விரோத கும்பல்களின் செயல்பாடுகள் அதிகரித்து, வியாபாரிகளிடம் மாமூல் பெறுவது, உணவகங்களில் சாப்பிட்டதற்கு பணம் கொடுக்காமல் செல்வது, உரிமையாளர்களையும், உணவகங்களையும் தாக்குவது, மருந்து கடைகளில் சிகிச்சை செய்ய கட்டாயப்படுத்துவது தொடர்கிறது.
விதிமீறல் செய்யாத மருந்து வியாபாரிகளை கொடூரமாக தாக்குவது, போலீசில் புகார் அளிப்பவர்களை பழிவாங்கும் நோக்கில் தாக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக, டிச., 29, இரவு, 10:00 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள வண்டலுார், ஓட்டேரியில் மெடிக்கல் ஸ்டோர் உரிமையாளர் வினோத்குமார், 43, என்பவர் ரவுடி கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டது, வியாபாரிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுதும் வியாபாரிகளை மிரட்டும் ரவுடிகள் உள்ளிட்டோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவமனைகள், டாக்டர்கள் மீது நடக்கும் தாக்குதலை தடுத்து நிறுத்த சட்டம் இயற்றப்பட்டது போல், மருந்து வியாபாரிகள் உட்பட அனைத்து வியாபாரிகளையும் பாதுகாக்கும் வகையில், அவசர சட்டம் இயற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.