ADDED : ஜூலை 27, 2011 01:27 AM

திண்டிவனம்:'தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்
நடத்தப்படும்' என, சமூக சமத்துவப்படை நிறுவனத் தலைவர் சிவகாமி
தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஒன்றியத்தில் நேற்று
பல்வேறு கிராமங்களுக்குச் சென்று பிரசாரம் செய்த அவர், கூச்சி கொளத்தூர்
கிராமக் கோவில் வளாகத்தில் பொதுமக்களிடையே பேசியதாவது:அனைத்து
கிராமத்திலும் கட்சிக் கிளைகள் துவக்கப்பட வேண்டும். உங்களுக்கு தேவையானதை
என்னால் முடிந்த அளவு செய்வேன். நீங்கள் தட்டிக் கேட்டு செயல்பட
வேண்டுமென்பதற்காகத் தான் இந்த கூட்டம் நடக்கிறது. (அப்போது, கிராம மக்கள்
பலரும், எங்கள் கிராமத்தில் ரேஷன் கடை இல்லை; மருத்துவமனை இல்லை. ஆற்றின்
குறுக்கே பாலம் கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கைகளை கூறினர்)
உங்கள் குறைகளை ஒரே நேரத்தில் பேசுவதால் ஒன்றும் புரியவில்லை. ஆனாலும்,
நீங்கள் கோபத்தில் உள்ளது தெரிகிறது. உங்கள் கோரிக்கைகளை முன்வைத்து
போராட்டம் நடத்தினால் எத்தனை பேர் வருவீர்கள்... கிராமத்தை ஒட்டியுள்ள
சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தலாம். இதை, வரும் செப்டம்பர்
மூன்றாவது வாரம் நடத்தலாம்.உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும், நோட்டீஸ்
போட்டு தெரிவித்து விட்டு, போராட்டம் நடத்தலாம். அதற்குள் அரசு ஏதாவது
செய்தால், போராட்டத்தை நிறுத்தி விடலாம். இல்லையேல், போராட்டத்தை
நடத்தலாம். போராட்டத்தில் யாராவது அடித்தால், நான் வாங்கிக் கொள்கிறேன்.நம் கோரிக்கைகளுக்காக ஒரு நாள் கஷ்டப்படுவோம். அப்போது, அரசு அதிகாரிகள் நேரில் வருவர். உங்கள் குறைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.
இவ்வாறு சிவகாமி பேசினார்.