திருப்பதிக்கு நெய் அனுப்பிய திண்டுக்கல் நிறுவனம் மறுப்பு
திருப்பதிக்கு நெய் அனுப்பிய திண்டுக்கல் நிறுவனம் மறுப்பு
UPDATED : செப் 23, 2024 02:32 PM
ADDED : செப் 21, 2024 01:20 AM

திண்டுக்கல், திருப்பதி லட்டு பிரசாதத்துக்கு பயன்படுத்தப்படும் நெய்யில், விலங்குகள் கொழுப்பு, மீன் கொழுப்பு கலந்திருப்பதாக மூன்று மாதங்களுக்கு முன் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்தது.
லட்டு பிரசாதத்துக்கு நெய் வினியோகம் செய்தது திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி எனும் பால் நிறுவனம் என தெரிய வந்ததையடுத்து, அது பேசுபெருளானது.
தொடர்ந்து, இந்நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்த்து ஆந்திர அரசு உத்தரவிட்டது.
அதே நேரத்தில், நெய் வழங்கியதற்கான பணம் நிலுவையில் உள்ளதாக கூறி, தனியார் நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மாதிரிகள் சேகரிப்பு
இதையறிந்த உணவு பாதுகாப்பு துறையினர், திண்டுக்கல்லில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆய்வு நடத்தி மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினர். அதன் முடிவுகள் பொது வெளியில் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையில், திண்டுக்கல் தனியார் நிறுவனம் திருப்பதிக்கு அனுப்பிய நெய், கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து அனுப்பப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் லெனி, கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
திருப்பதி தேவஸ்தானத்துக்கு கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் எங்கள் நிறுவனத்தின் சார்பில் நெய் அனுப்பப்பட்டது. பல்வேறு நிறுவனங்களிடமிருந்து திருப்பதிக்கு நெய் செல்கிறது.
அந்த வகையில் எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில், 0.5 சதவீதம் மட்டுமே அனுப்பப்பட்டது. அதில், எங்கள் நிறுவனம் அனுப்பியது, 0.1 சதவீதம் கூட இருக்காது.
தற்போது, அங்கு நெய் அனுப்புவது இல்லை. திருப்பதிக்கு அனுப்பிய நெய்யின் தரம் குறித்த ஆய்வறிக்கை தரவுகள் எங்களிடம் உள்ளன.
உணவு பாதுகாப்புத் துறை, அக்மார்க் சார்பில் எங்கள் நிறுவனத்திலுள்ள நெய்யை, தர மாதிரிக்கு சேகரித்துச் சென்றனர். எங்கள் பொருட்கள் பல இடங்களில் விற்பனைக்காக உள்ளன. அங்கு சென்று எங்கள் பொருட்களின் தரத்தை பரிசோதனை செய்து கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவித்தனர்.
நிறுவன உரிமையாளர் ராஜசேகரனை தொடர்பு கொண்டு கேட்டபோது, “அனைத்து பதில்களையும் எங்கள் நிறுவனத்தின் தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகளே தெரிவித்துவிட்டனர். நாங்கள், 25 ஆண்டுகளாக நிறுவனத்தை நடத்துகிறோம். நான் சொல்ல ஒன்றுமில்லை,” என்றார்.
அதிகாரிகள் ஆய்வு
இதற்கிடையே, திண்டுக்கல்லில் பால் பொருட்கள் தயாரிக்கும் ஏ.ஆர்.டெய்ரி புட் நிறுவனத்தில், மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
“நிறுவனத்தில் இருந்து வரக்கூடிய கழிவுநீரை ஆய்விற்காக எடுத்துச் செல்கிறோம். இந்த மாதிரிகள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆய்வுக் கூடத்தில் பரிசோதிக்கப்படும்.
“ஆய்வில் குறைகள் கண்டறியப்பட்டால் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என, மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் அனிதா தெரிவித்தார்.