பாலமேட்டில் துணை முதல்வர், அலங்காநல்லுாரில் முதல்வர் ஜல்லிக்கட்டை துவக்கி வைக்கின்றனர்
பாலமேட்டில் துணை முதல்வர், அலங்காநல்லுாரில் முதல்வர் ஜல்லிக்கட்டை துவக்கி வைக்கின்றனர்
ADDED : ஜன 08, 2026 04:11 AM

அலங்காநல்லுார்: மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜன.16ல் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வரும், அலங்காநல்லுாரில் ஜன.17ல் முதல்வரும் துவக்கி வைக்க வருகின்றனர்,'' என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
ஜன.16 ல் பாலமேடு, ஜன.17 ல் அலங்காநல்லுாரில் தமிழக அரசு சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. அதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா அலங்காநல்லுார் மற்றும் பாலமேடு வாடிவாசல் முன்பாக நடந்தது.
முன்னதாக கிராம கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. அமைச்சர் மூர்த்தி தலைமை வகித்தார். கலெக்டர் பிரவீன் குமார், எம்.எல்.ஏ.,வெங்கடேசன், ஆர்.டி.ஓ., கருணாகரன், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன், தி.மு.க., ஒன்றிய, நகர செயலாளர்கள் தன்ராஜ், முத்தையன், ரகுபதி, சத்யபிரகாஷ், பேரூராட்சி தலைவர்கள் ரேணுகா ஈஸ்வரி, பால்பாண்டியன், ஜெயராமன், துணைத் தலைவர்கள் சாமிநாதன், ராமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:
அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்பாக நடக்க உள்ளது.
அலங்காநல்லுார் போட்டியை முதல்வர் ஸ்டாலின், பாலமேடு போட்டியை துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைக்கின்றனர்.
முதல்வர், துணை முதல்வர் சார்பில் கார் பரிசளிக்கப்படுகிறது. நன்கொடையாளர்கள் பெயரிலும் பரிசுகள் வழங்கப்படும்.
பா.ம.க., மற்றும் விவசாய சங்கங்கள் கோரிக்கையை ஏற்று மூன்று போட்டிகளிலும் டிராக்டர் பரிசாக வழங்கப்படும். கலெக்டர் தலைமையில் தான் போட்டி நடக்கும்;
வழக்கம்போல் பார்வையாளர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கேலரியில் இருந்து மாற்றப்படுவார்கள். இவ்வாறு தெரிவித்தார்.
அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர், பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

