விடுபட்டவர்களுக்கு டிச.12 முதல் மகளிர் உரிமைத்தொகை; துணை முதல்வர் உதயநிதி தகவல்
விடுபட்டவர்களுக்கு டிச.12 முதல் மகளிர் உரிமைத்தொகை; துணை முதல்வர் உதயநிதி தகவல்
ADDED : டிச 05, 2025 03:30 AM

சிவகாசி : ''விடுபட்ட பெண்களுக்கு டிச., 12 முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்,'' என, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாநகராட்சி மேயர் சங்கீதா மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.
அவர் பேசியதாவது: இந்தியாவில் முதன்முதலில் தமிழகத்தில் பெண் போலீசாரை நியமித்ததே தி.மு.க., தலைவராக இருந்த கருணாநிதி தான். மேலும் மகளிர் சுய உதவி குழுக்களை உருவாக்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயரச் செய்ததும் அவர் தான். கட்டணமில்லா மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட மகளிர் வளர்ச்சி திட்டங்களை தி.மு.க., அரசு செயல்படுத்தி வருகிறது. டிச., 12 முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.
மகளிர் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் தமிழக அரசு முதலிடம் பெறுவதைப்பொறுத்துக் கொள்ள முடியாமல் மத்திய அரசு நிதி உரிமையை பறிக்கிறார்கள். எஸ்.ஐ.ஆர் என்று சொல்லி ஓட்டுரிமையை பறிக்கிறார்கள். தொகுதி மறுசீரமைப்பு என்று கூறி தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க முயற்சிக்கிறார்கள்.
இதையும் மீறி தமிழகம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதே நிலை தொடர தி.மு.க.,விற்கு தங்களது ஆதரவை தர வேண்டும். குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

