தமிழகத்திற்கு பொறுப்பு டிஜிபி நியமனம்; யார் இந்த வெங்கட்ராமன்?
தமிழகத்திற்கு பொறுப்பு டிஜிபி நியமனம்; யார் இந்த வெங்கட்ராமன்?
ADDED : ஆக 31, 2025 01:07 PM

சென்னை: தமிழக போலீசின் நிர்வாகப் பிரிவு டிஜிபி.,ஆக பதவி வகித்து வரும் வெங்கட்ராமனுக்கு கூடுதலாக டிஜிபி பதவி (பொறுப்பு) வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக காவல் துறை படைத்தலைவர் மற்றும் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.,யாக பணிபுரிந்து வரும் சங்கர் ஜிவால், இன்றுடன் (ஆக.31) ஓய்வு பெறுகிறார். சங்கர் ஜிவால் ஓய்வு பெற உள்ளதால், புதிய சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.,யை தேர்வு செய்ய, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பட்டியல், டி.ஜி.பி., அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதில், 11 அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. முதல் மூன்று இடங்களில், தற்போது தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டி.ஜி.பி.,யாக உள்ள சீமா அகர்வால், ஆவின் விஜிலென்ஸ் முதன்மை அதிகாரியாக உள்ள டி.ஜி.பி., ராஜீவ் குமார், போலீஸ் அகாடமி இயக்குநர், டி.ஜி.பி., சந்தீப் ராய் ரத்தோட் பெயர்கள் உள்ளன.
இந்த பட்டியலில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, டிஜிபியாக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்வு நடைமுறை நிறைவடையாத காரணத்தால் பொறுப்பு டிஜிபி நியமனம் செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
அதன்படி தற்போது டி.ஜி.பி., அலுவலகத்தில், நிர்வாகப்பிரிவு டி.ஜி.பி.,யாக பணியாற்றி வரும் வெங்கட்ராமன், பொறுப்பு டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
யார் இந்த வெங்கட்ராமன்?
* கடந்த 1994ம் ஆண்டு ஐ.பி.எஸ்., அதிகாரியான, இவர் சைபர் குற்றப்பிரிவு உட்பட, பல பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.
* 2001ல் சிபிஐ சென்னை எஸ்பியாக பணியாற்றியவர். அதிலேயே 2008ல் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார்.
* 2009ல் தமிழக காவல் துறையில் சிபிசிஐடி டிஐஜியாக இருந்தவர். 2012ல் ஐஜியாக பதவி உயர்வு பெற்றார்.
* 2019ல் ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று, சைபர் கிரைம் தலைமையகம், நிர்வாக பிரிவுகளில் பணியாற்றினார்.
*2024ல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றவர். சட்டம் ஒழுங்கு கூடுதல் பொறுப்பு டிஜிபியாக பணியாற்றி வந்தார்.