தனுஷ்கோடி ராமர் பாலத்தில் மலர் துாவி பிரதமர் மோடி வழிபாடு
தனுஷ்கோடி ராமர் பாலத்தில் மலர் துாவி பிரதமர் மோடி வழிபாடு
UPDATED : ஜன 22, 2024 03:38 AM
ADDED : ஜன 22, 2024 03:37 AM

ராமேஸ்வரம் : தனுஷ்கோடியில் ராமர் இலங்கைக்கு கடலில் அமைத்த பாலத்தின் மீது, பிரதமர் மோடி மலர் துாவி வழிபாடு நடத்தினார்.
கேலோ இந்தியா போட்டிகளை சென்னையில் துவக்கி வைத்த மோடி, மறுநாள் ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்; பின்னர் ராமேஸ்வரம் வந்து புனித தீர்த்தமாடினார்.
ராமகிருஷ்ண மடத்தில் இரவு தங்கிய பிரதமர், நேற்று காலை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்தார். நெடுஞ்சாலை ரவுண்டானாவில் அசோகா சின்னம் மீது மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
![]() |
கலச பூஜை
பின், காரில் புறப்பட்டு தனுஷ்கோடி அருகேயுள்ள கோதண்டராமர் கோவிலுக்கு சென்றார்.
அயோத்தி கும்பாபி ஷேகம் வெற்றிகரமாக நடக்கவும், உலக நன்மைக்காகவும் நடந்த கலச பூஜையில் பங்கேற்றார்.
கோவில் குருக்கள் விஜய்போகில், சிவமணி, கணேசன் பட்டாச்சாரியார், சிரஞ்சீவி ஆகியோர் கலச பூஜை செய்து மகாதீபாராதனை நடத்தினர். 20 நிமிடம் மோடி தரையில் அமர்ந்து பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
அங்கிருந்து ராமேஸ்வரம் ஹெலிபேடு வந்து, ஹெலிகாப்டரில் மதுரை சென்றார்.
விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் முருகன், தமிழக சுற்றுலா துறை செயலர் மணிவாசகம், தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை, எம்.பி.க்கள் ரவீந்திரநாத், தர்மர் உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.
![]() |
மலர் மாலை, பொன்னாடை, பூங்கொத்து எதுவும் அனுமதிக்கப்படவில்லை. 12:45க்கு தனி விமானத்தில் டில்லி புறப்பட்டார். புனித நீர் கலசங்களும் அவருடன் சென்றன.
40 நிமிடம் இருந்தார்
தனுஷ்கோடியில் சுட்டெரித்த வெயிலையும் பொருட்படுத்தாமல், பிரதமர் மோடி 40 நிமிடங்கள் இருந்தார்.
ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி சென்ற பிரதமரை, சாலை ஓரத்தில் காத்திருந்த மக்கள் பார்த்து உற்சாகமாக கோஷமிட்டனர்.
அரிச்சல்முனை நெடுஞ்சாலை ரவுண்டானாவில் இருந்த டெலஸ்கோப்பில், இலங்கை செல்லும் கடல் வழிப்பகுதியை மோடி பார்வையிட்டார்.
பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் இந்திய கடலோர காவல் படையின் இரு கப்பல்கள் ரோந்து சுற்றி வந்தன.
மீனவர் காங்., போராட்டம்
பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மீனவர் காங்., சார்பில், தேசிய தலைவர் ஆம்ஸ்டிராங் பெர்னாண்டோ தலைமையில், ராமேஸ்வரம் அருகே பாம்பன் பாலத்தில் நேற்று காலை, 10:00 மணிக்கு கருப்பு பலுான்களை பறக்கவிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்; கோஷங்களும் எழுப்பினர்.
'ஏசி' இல்லா அறையில் ஓய்வு
ராமேஸ்வரம் ராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகி சுவாமி சச்சிதானந்தா கூறியதாவது:
பிரதமர் மோடி ஜனவரி 20ல் புனித தீர்த்தங்களில் நீராடி, ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அன்று மாலை 6:45 மணிக்கு எங்களின் மடத்திற்கு வந்தார்.
மடத்தில் இரவு 7:00 மணிக்கு நடந்த ராமர், ராமகிருஷ்ணரின் கீர்த்தனை பஜனையை, தரையில் அமர்ந்தபடி கேட்டு ரசித்தார். பின், ராமர், ராமகிருஷ்ணர், சாரதாதேவி, விவேகானந்தர் உருவப்படத்திற்கு தீபாராதனை காட்டி சுவாமி தரிசனம் செய்தார்.
அரை மணி நேரம் நடந்த நிகழ்ச்சியில் பிரதமருடன் ராமகிருஷ்ண மடத்தின் சார்பில், 10 துறவிகள் பங்கேற்றனர். பின், அன்றிரவு மடத்தில் உள்ள சிறிய அறையில் பிரதமர்ஓய்வெடுத்தார்.
மடத்தில் நடந்த பஜனைக்கு பின், எங்களுடன் பிரதமர் மோடி, 'குரூப் போட்டோ' எடுத்துக் கொண்டார். பிரதமர், 11 நாட்கள் விரதம் இருப்பதால், இரவில் இளநீர் மட்டும் பருகிவிட்டு, 'ஏசி' வசதி இல்லாத, 10க்கு 12 அடி அளவு உடைய, 14ம் எண் சிறிய அறையில், தரையில் சாதாரண படுக்கை விரித்துஓய்வெடுத்தார்.
நேற்று காலையிலும் எதுவும் சாப்பிடாமல், மீண்டும் இளநீர் மட்டும் குடித்து விட்டு காரில் புறப்பட்டு சென்றார். இது போன்ற ஓர் எளிமையான பிரதமரை நான் பார்த்ததில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
வியாபாரியிடம் நலம் விசாரிப்பு
தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோவில் எதிரில், இளநீர் விற்கும் பாலமுருகன் கடைக்கு பிரதமர் மோடி சென்றார். அவரிடம், 'நல்லா இருக்கிறீர்களா, தினமும் கோவிலுக்கு பக்தர்கள் எத்தனை பேர் வருவர். இளநீர் விலை எவ்வளவு' என்று கேட்டு நலம் விசாரித்தார்.
அதற்கு பாலமுருகன், 'கடவுள் அருளால் நன்றாக உள்ளோம். ஒரு நாளைக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். முன்னர் ஒரு இளநீர், 30 ரூபாய்க்கும், தற்போது, 50 ரூபாய்க்கும் விற்கிறோம்' என்றார். உடனே பிரதமர் மோடி, அந்த வியாபாரியை தோளில் தட்டிக் கொடுத்து புன்கையுடன் சென்றார்.