'சிடி'யை எழுத்து வடிவமாக்க ரூ.10 லட்சம் செலுத்தும்படி தோனிக்கு உத்தரவு
'சிடி'யை எழுத்து வடிவமாக்க ரூ.10 லட்சம் செலுத்தும்படி தோனிக்கு உத்தரவு
ADDED : பிப் 13, 2026 01:29 AM

சென்னை: ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி சம்பத்குமாருக்கு எதிரான வழக்கில் தொடர்பு உடைய 'சிடி'யை எழுத்து வடிவமாக்குவதற்கான கட்டணம், 10 லட்சம் ரூபாயை, மார்ச் 12ம் தேதிக்குள் செலுத்தும்படி, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐ.பி.எல்., சூதாட்ட வழக்கு தொடர்பாக, தொலைக்காட்சி விவாதத்தில், தனக்கு எதிராக அவதுாறு கருத்துக்கள் கூறியதாக, ஐ.பி.எஸ்., அதிகாரி சம்பத்குமார், தனியார் தொலைகாட்சி நிறுவனங்கள் போன்றவற்றுக்கு எதிராக, நுாறு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி, கிரிக்கெட் வீரர் தோனி, கடந்த 2014ல், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில் தொடர்புடைய ஆதாரமான, 'சிடி' பதிவை எழுத்து வடிவமாக்க, அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என, உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.
இந்த வழக்கில், நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா பிறப்பித்த உத்தரவு:
வழக்கு தொடர்பான 'சிடி' எனும் குறுந்தகடில் உள்ள பதிவுகளை, எழுத்து வடிவமாக்க மொழி பெயர்ப்பாளரும், தட்டச்சரும் முழு நேரத்தை ஒதுக்க வேண்டியுள்ளது. இதற்கு மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை ஆகலாம். மொழியாக்கம் செய்யப்படும் ஆவணங்களை நகல் எடுக்கவும், கூடுதல் செலவினம் ஏற்படுகிறது.
எனவே, மொழியாக்கத்துக்கான கட்டணமாக, 10 லட்சம் ரூபாயை தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு, மார்ச் 12ம் தேதிக்குள், வழக்கின் மனுதாரரான தோனி செலுத்த வேண்டும். மொழியாக்கப் பணிகளை மார்ச் 3வது வாரத்துக்குள் முடிக்க வேண்டும். விசாரணை, மார்ச் 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

