ADDED : ஜன 31, 2024 12:50 AM

என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: '
இண்டியா' கூட்டணி, லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்று விடும் என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆசைப்படுகிறார். இவரின் ஆசை, கூட்டணியில் உள்ள மற்ற கட்சியினருக்கு இல்லை.
ஸ்டாலினின் ஆசையை நிராசையாக்கும் முயற்சியாக, திரிணமுல் மம்தா பானர்ஜியும், ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவாலும் தனித்துப் போட்டியிட தயாராகி விட்டனர்.கூட்டணித் தேருக்கு அச்சாரம் போட்ட நிதீஷ் குமாரோ, தேரே ஆட்டம் காணும் வகையில், கூட்டணியிலிருந்து கழன்று, பா.ஜ.,வுடன் மீண்டும் ஐக்கியமாகி விட்டார். இதைக் கண்டு கூட்டணிக்கு வெளியில் உள்ள கட்சியினரே, அதிர்ச்சி அடைந்து விட்டனர்.
தேர்தல் வரையாவது, இண்டியாகூட்டணி நிலைத்திருக்குமா என்பது, கேள்விக்குறியே! பிரதமர் மோடியை, சர்வாதிகாரியாகச் சித்தரிக்க இண்டியா கூட்டணி தலைவர்கள் பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றனர். அதை மக்கள் நம்புவரா என்பதும் கேள்விக்குறியே!
மதச்சார்பற்றவர்களாகக் காட்டிக் கொள்பவர்கள், தங்கள் வாதத்தை ஆணித்தரமாக எடுத்து வைக்க, போதிய ஆதாரங்கள் கிடைக்காமல் இருப்பதாலும், மாநிலத்திற்கு மாநிலம், கூட்டணிக் கட்சியினர் மவுசு இல்லாமல் இருப்பதாலும், இண்டியாவுக்கு இந்த தேர்தல் சிரமம் தான்!