ADDED : பிப் 07, 2026 02:44 AM
சென்னை: பயணியர் வருகை அதிகமாக உள்ள, 30க்கும் அதிகமான ரயில் நிலையங்களில், 'டிஜிட்டல் லாக்கர்' வசதி ஏற்படுத்த, தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில், பயணியர் அதிகம் வரும் சென்னை சென்ட்ரல், காட்பாடி, திருச்சி, மேல்மருவத்துார், திருவண்ணாமலை உட்பட பல்வேறு ரயில் நிலையங்களில், 'டிஜிட்டல் லாக்கர்' வசதி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பயணியர் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைத்து செல்ல, இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
இதற்கு கட்டணமாக, ஆறு மணி நேரத்துக்கு 60 ரூபாய்; 24 மணி நேரத்துக்கு 100 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல, மதுரை, கோவை, ராமேஸ்வரம், பெங்களூரு உட்பட, 30க்கும் அதிகமான ரயில் நிலையங்களில், இந்த வசதியை விரிவுபடுத்த தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, 'டிஜிட்டல் லாக்கர்' திட்டத்தை செயல்படுத்தும் போன்செல் நிறுவன விற்பனை பிரிவு மேலாளர் சண்முகசுந்தரம் கூறியதாவது:
ரயில் நிலையங்களில், பயணியர் மற்றும் சுற்றுலா பயணியரின் உடைமைகளை பாதுகாத்து திருப்பி அளிக்கும் வகையில், ரயில்வேயிடம் ஒப்பந்தம் செய்து டிஜிட்டல் லாக்கர் வசதியை அளித்து வருகிறோம்.
ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையம் அருகில் உள்ள முக்கிய ஆன்மிக சுற்றுலா மையங்களிலும், இவ்வசதியை ஏற்படுத்தி வருகிறோம். இதற்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

