பெண்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் தினகரன் வலியுறுத்தல்
பெண்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் தினகரன் வலியுறுத்தல்
ADDED : மே 09, 2025 01:09 AM
சென்னை:'ஈரோடில் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கும்பல் மீது, கடும் நடவடிக்கை எடுப்பதோடு, தி.மு.க., ஆட்சியின் எஞ்சிய ஓராண்டிலாவது, பெண்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்' என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
ஈரோடு மாவட்டத்தில், 17 வயது சிறுமி, நான்கு பேர் கொண்ட கும்பலால், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் ஆட்சி அமைத்து, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததை, முதல்வரும், தி.மு.க.,வினரும் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில், இச்சம்பவம் நடந்துள்ளது. இது பெண்களுக்கு எதிரான, தி.மு.க.,வின் நான்காண்டு கால அவல ஆட்சியை, பொதுமக்கள் மத்தியில், வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
தமிழகத்தில், பெண்களுக்கு எதிராக அரங்கேறும், பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்கவோ, அதற்கு அடிப்படை காரணமாக இருக்கும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராள புழக்கத்தை கட்டுப்படுத்தவோ, கடந்த நான்கு ஆண்டுகளில், எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க., அரசால், பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, ஈரோட்டில் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கும்பல் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க., ஆட்சியின் எஞ்சிய ஓராண்டிலாவது, பெண்கள் பாதுகாப்பில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.