தினமலர் செய்தி எதிரொலி: அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்படுத்த வல்லுநர் குழு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
தினமலர் செய்தி எதிரொலி: அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்படுத்த வல்லுநர் குழு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
UPDATED : ஆக 11, 2025 02:22 PM
ADDED : ஆக 11, 2025 11:53 AM

உடுமலை: அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் செயல்படுவது குறித்து வல்லுநர் குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் என்று, உடுமலையில் நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். தினமலர் செய்தி எதிரொலியாக, முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, 1960ல் துவக்கப்பட்டது. இந்த ஆலையில், கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள, 18,500 விவசாயிகள் அங்கத்தினர்களாக உள்ளனர்.
ஆண்டுக்கு, 10 மாதங்கள் இயங்கி, 4.5 லட்சம் டன் வரை கரும்பு அரவை செய்யப்பட்டு வந்தது. இங்குள்ள இயந்திரங்கள் நிறுவி, 64 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், பெரும்பாலும் தேய்மானம் அடைந்தும், அரவை திறன் குறைந்து, சர்க்கரை உற்பத்தி பாதித்தது.
ஒரு லட்சம் பேர் பாதிப்பு
ஆலை இயந்திரங்களை புதுப்பிக்க, விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழக்கமாக, மார்ச் மாதத்தில், பாய்லர் இளஞ்சூடு ஏற்றப்பட்டு, ஏப்.,1 முதல் கரும்பு அரவை துவங்கும். மூன்று ஆண்டுகளாக, இயந்திரங்கள் பழுது, பராமரிப்பில் சிக்கல் உள்ளிட்ட காரணங்களால், ஆலை இயக்க முடியாமல், மூடப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் நலிவடைந்து கொண்டே வந்த ஆலை, மூன்றாண்டுக்கு முன் எந்த இயக்கமும் இன்றி மூடப்பட்டது. இதனால் மூன்று மாவட்ட கரும்பு விவசாயிகள், தொழிலாளர்கள், கரும்பு வெட்டு ஆட்கள், வாகன டிரைவர்கள் என நேரடியாகவும், மறைமுகமாகவும், ஒரு லட்சம் தொழிலாளர்கள் பாதித்துள்ளனர்.
ஆலையை முழுமையாக நவீனப்படுத்த, முதற்கட்டமாக, 56 கோடி ரூபாய் தேவை என, அரசுக்கு சில ஆண்டுகளுக்கு முன், கருத்துரு அனுப்பி வைத்தும், நிதி ஒதுக்கவில்லை. பின் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை முழுமையாக புனரமைப்பு செய்ய, 160 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டம், அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆலை மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், 'தமிழகத்தில், கூட்டுறவு முறையில் துவக்கப்பட்ட முதல் சர்க்கரை ஆலை, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையாகும். கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள, கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருந்த ஆலை மூடப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது. சர்க்கரை ஆலையை புதுப்பித்து, உற்பத்தியை மீண்டும் துவக்க வேண்டும்,' என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
தினமலர் நாளிதழ் செய்தி
விவசாயிகள் நலன் கருதி தொடங்கப்பட்ட இந்த ஆலையை நலிவில் இருந்து மீட்க வேண்டும், புனரமைக்க வேண்டும் என்று தினமலர் நாளிதழ் சார்பில், 15 ஆண்டுகளாக தொடர்ந்து செய்திகள் வெளியிடப்பட்டன.
தமிழக முதல்வராக இருப்போர் உடுமலை வரும்போதெல்லாம், 'முதல்வர் கவனத்துக்கு' என்ற தலைப்பில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. அந்த வகையில், இன்று முதல்வர் ஸ்டாலின் உடுமலை வருகை முன்னிட்டும், கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடப்பட்டிருப்பது பற்றியும், அதை திறக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் விரிவான செய்தியை தினமலர் நாளிதழ் வெளியிட்டது. சர்க்கரை ஆலையை புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்து, அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
முதல்வர் அறிவிப்பு
அதன் எதிரொலியாக, இன்று உடுமலையில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் நல்ல அறிவிப்பை வெளியிட்டார். 'அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் செயல்படுத்துவது குறித்து வல்லுநர் குழு அமைத்து ஆய்வு செய்யப்படும்' என்று முதல்வர் அறிவித்தார். தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதல்வர் வெளியிட்ட இந்த அறிவிப்பு, மூன்று மாவட்ட விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.