மக்கள் எண்ணத்தை வெளியிட்ட தினமலர் நாளிதழ்: அ.தி.மு.க., பாராட்டு
மக்கள் எண்ணத்தை வெளியிட்ட தினமலர் நாளிதழ்: அ.தி.மு.க., பாராட்டு
UPDATED : ஜன 30, 2026 06:18 AM
ADDED : ஜன 30, 2026 01:25 AM

மதுரை: தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழக நிலவரம், தி.மு.க., ஆட்சியின் செயல்பாடுகள், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வின் செயல்பாடுகள் குறித்து தினமலர் - சாணக்யா சார்பில் மக்கள் கருத்து கணிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
இதில் 'எதிர்க்கட்சி தலைவராக பழனிசாமி சிறப்பாக செயல்பட்டார். நாளைக்கே தேர்தல் வைத்தாலும் அவர்தான் வரவேண்டும்' என்று மக்கள் எண்ணங்களை கண்ணாடி படம் போல படம் பிடித்து வெளியிட்டதாக தினமலர் நாளிதழ், சாணக்கியா யுடியூப் சேனலை அ.தி.மு.க., சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் பாராட்டினார்.
மதுரையில் அவர் கூறியதாவது: ஸ்டாலின் பெயிலியர் மாடல் ஆட்சியில் அதிகார பலம், அதிகார துஷ்பிரயோகம், படைபலம், பணபலம் என மக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதை மக்கள் உணர்ந்துள்ளார்கள். ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதற்கு பழனிசாமிதான் முதல்வராக வரவேண்டும் என்ற கள நிலவரத்தை கண்ணாடி படம் போல் தினமலர் நாளிதழ், சாணக்யா எடுத்த கருத்துக்கணிப்பில் தெளிவாக மக்கள் தீர்ப்பளித்து உள்ளார்கள் .
சிறப்பாக செயல்படக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி என்று 52 சதவீதம் மக்கள் தீர்ப்பளித்துள்ளார்கள். இன்றைக்கு ஆளுங்கட்சியின் அராஜகம் மக்கள் விரோத போக்கை சட்டசபையில் தொடர்ந்து விவாதித்து வருகிறார். உங்களுக்கு பிடித்த முதல்வர் வேட்பாளர் என்ற பட்டியலில் 33 சதவீதம் இடம் பிடித்துள்ளார். ஸ்டாலின் 27 சதவீதம் இடம் பிடித்துள்ளார்.
விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பாலியல் பலாத்காரம், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வில் இருந்து காப்பாற்ற அவர்தான் ஒரே வழி என்று மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள்.
இன்றே தேர்தல் வைத்தாலும் 38 சதவீதம் பழனிசாமிக்கும், 33 சதவீதம் தி.மு.க.,விற்கும், 22 சதவீதம் த.வெ.க.,விற்கும் கிடைக்கும் என மக்கள் மனசாட்சியை படம்பிடித்து காட்டியுள்ளது. புதிய சரித்திரம் படைக்கப் போகிறோம் என்றார்.

