எம்.பி.பி.எஸ்., 'சீட்' அதிகரிக்க வாய்ப்பு மருத்துவ கல்வி இயக்ககம் தகவல்
எம்.பி.பி.எஸ்., 'சீட்' அதிகரிக்க வாய்ப்பு மருத்துவ கல்வி இயக்ககம் தகவல்
UPDATED : அக் 31, 2025 12:13 AM
ADDED : அக் 30, 2025 11:22 PM

சென்னை:தமிழக மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., இடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மூன்றாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள், நவ.,1ம் தேதி பிற்பகலுக்கு பின் இடங்களை தேர்வு செய்யும்படி, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் எம்.பி. பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, இரண்டு கட்ட கலந்தாய்வுகள் முடிந்துள்ளன.
இதற்கிடையே, புதிதாக 250 எம்.பி.பி.எஸ்., இடங்கள் சேர்க்கப்பட்டதால், அவற்றுக்கும், ஏற்கெனவே காலியாக உள்ள இடங்களுக்கும், மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடந்து வருகிறது. அந்த இடங்களை தேர்வு செய்வதற்கான அவகாசம், நேற்று முதல் நவ., 1ம் தேதி மாலை 5:00 மணி வரை வழங்கப்பட்டு உள்ளது.
அதன் அடிப்படையில், வரும், 2ம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதன் முடிவுகள் 3ம் தேதி வெளியிடப்பட உள்ளன.
இந்நிலையில், தமிழக மருத்துவ கல்லுாரிகளில், கூடுதலாக எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓரிரு நாட்களில் அதற்கான அனுமதியை, தேசிய மருத்துவ ஆணையம் வழங்கும் என தெரிகிறது.
எனவே, இடங்களை இறுதி செய்து தேர்ந்தெடுப்பதற்கான அவகாசத்தை மட்டும், மருத்துவ கல்வி இயக்ககம் மாற்றி அமைத்துள்ளது.
அதன்படி, நவ.,1ம் தேதி நண்பகல் 12:00 மணிக்கு மேல், மாலை 5:00 மணிக்குள் இடங்களை இறுதி செய்லாம் என, தெரிவித்து உள்ளது.
புதிய இடங்கள் வருவதற்கு முன், மற்ற கல்லுாரிகளில் இடங்கள் தேர்வு செய்து விட்டால், மீண்டும் மாற்ற இயலாது என்பதற்காக, இத்திருத்தம் செய்யப்பட்டு உள்ளது என, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

