உதவித்தொகை உயர்வு கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
உதவித்தொகை உயர்வு கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
ADDED : ஜன 22, 2025 12:48 AM

சென்னை:உதவித்தொகை உயர்வு கேட்டு, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், தமிழகம் முழுதும் நேற்று, 126 இடங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட்டது.
சென்னை, கிண்டியில் சங்க தலைவர் வில்சன், திருவொற்றியூரில் பொதுச்செயலர் ஜான்சிராணி, ஈரோட்டில் அகிய இந்திய செயல் தலைவர் நம்புராஜன் தலைமையில் போராட்டம் நடந்தது.
சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
ஆந்திர அரசு தற்போது, மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை குறைந்தபட்சம், 6,000; கடும் ஊனமுற்றோருக்கு, 10,000; முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 15,000 ரூபாயாக வழங்கி வருகிறது. மொத்த பயனாளிகள் எண்ணிக்கை, 8.5 லட்சம் பேர்.
தமிழகத்தில் பெரும்பாலான மாற்றுத்திறனாளி களுக்கு, 1,500 ரூபாய், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் கடும் ஊனமுற்றோர் உள்ளிட்ட ஐந்து பிரிவினருக்கு மட்டும், 2,000 ரூபாய் என, மொத்தம் 7.37 லட்சம் பேருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
எங்கள் கோரிக்கை அரசுக்கு செல்லும் வகையில், சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.