பள்ளி மாணவர்கள் வாயிலாக நோய் தடுப்பு விழிப்புணர்வு
பள்ளி மாணவர்கள் வாயிலாக நோய் தடுப்பு விழிப்புணர்வு
ADDED : ஜூன் 24, 2025 02:53 AM

சென்னை: பள்ளி மாணவர்கள் வாயிலாக, ஒரு கோடி குடும்பங்களுக்கு நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை, அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
சென்னை தி.நகர் ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் சாரதா வித்யாலயா மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், 50 லட்சம் மாணவர்கள் வாயிலாக, ஒரு கோடி குடும்பங்களுக்கு, நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம் நேற்று துவங்கப்பட்டது.
திட்டத்தை துவக்கிவைத்தபின், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:
நோய் தடுப்பு மற்றும் ஆரம்ப கால நோய் கண்டறியும் விழிப்புணர்வு இல்லாததால், பெரும்பாலானோருக்கு நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மாணவர்களுக்கு நோய் தடுப்பு பயிற்சி கொடுத்து, அவர்கள் வழியே குடும்பத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்; இது, நோய் பாதிப்பை குறைப்பதற்கும், உரிய மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்வதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் 16,566 பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் 50.76 லட்சம் மாணவர்களுக்கு, தேசிய சிறார் நலத்திட்டத்தில் மருத்துவ அலுவலர்களால், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நோய் தடுப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
இத்திட்டத்தை பள்ளி மாணவர்களிடம் துவங்குவதன் வாயிலாக, ஒரு கோடி குடும்பங்களுக்கு நோய் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்த மாணவர்கள் சுகாதாரத்துறையின் துாதுவர்களாக செயல்படுவர்.
இதுதவிர, வளரிளம் பருவத்தினருக்கு, ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை திறன் குறித்த விழிப்புணர்வு திட்டத்தில், வளரிளம் பருவத்தில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும்.
இத்திட்டத்தில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் பயன்பெறுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.