தி.மு.க., -- எம்.பி., மீதான வழக்கு ரத்து: ஐகோர்ட்
தி.மு.க., -- எம்.பி., மீதான வழக்கு ரத்து: ஐகோர்ட்
ADDED : பிப் 20, 2026 03:51 AM

சென்னை: தி.மு.க., -- எம்.பி., தங்கத்தமிழ் செல்வன் மீதான தேர்தல் விதிமீறல் வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு, கடந்த 2019ல் இடைத்தேர்தல் நடந்தது.
அப்போது, அ.ம.மு.க. வேட்பா ளர் மகேந்திரன், வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றபோது, தேர்தல் நடத்தை விதிகளை மீறி, தற்போதைய தி.மு.க., எம்.பி., தங்கத்தமிழ் செல்வன் உட்பட 15 பேருடன் சென்றதாக, மகேந்திரன், தங்கத்தமிழ் செல்வன் உட்பட 15 பேருக்கு எதிராக, திருநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தங்கத்தமிழ் செல்வன் மனு தாக்கல் செய்தார். மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 'கடந்த, 2019ல் நடந்த சம்பவம் தொடர்பாக, 2022ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
'இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்க, வகை செய்யும் பிரிவுகளில் பதியப்பட்ட இந்த வழக்கில் மூன்று ஆண்டுகளுக்கு பின், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால், வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி, தாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது எனக் கூறி, மதுரை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

