தி.மு.க., - எம்.பி., - எம்.எல்.ஏ., உருவப்படத்தை எரித்து ஆவேசம்
தி.மு.க., - எம்.பி., - எம்.எல்.ஏ., உருவப்படத்தை எரித்து ஆவேசம்
ADDED : பிப் 18, 2025 07:22 AM

செய்யாறு; திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, 'சிப்காட்' விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்க ஆதரவாக செயல்படுவதாக கூறி, தி.மு.க., - எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி., உருவப்படத்தை எரித்து, விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
செய்யாறு மேல்மா, 'சிப்காட்' விரிவாக்கத்திற்கு, மேல்மா, மணிப்பூர், தேத்துறை, குரும்பூர், நர்மா பள்ளம், நெடுங்கல், அத்தி, வட ஆலபிறந்தான், இளநீர்குன்றம், வீரம்பாக்கம், காட்டுக்குடிசை உள்ளிட்ட 11 கிராம விவசாயிகளிடம் இருந்து, 3,174 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த முயற்சி நடக்கிறது.
விவசாய நிலங்களை தரிசு எனக்கூறி கையகப்படுத்த ஆதரவாக, செய்யாறு தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜோதி, ஆரணி தி.மு.க., - எம்.பி., தரணிவேந்தன் செயல்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதை கண்டித்து, இளநீர் குன்றத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று முன்தினம் இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இருவரின் உருவப்படத்தையும் எரித்தனர். செய்யாறு டி.எஸ்.பி., சண்முகவேலன் பேச்சு நடத்திய பின், அனைவரும் கலைந்து சென்றனர்.

