தொகுதி மறுவரையறையில் பாதிப்பு வருமா; அமித் ஷாவுக்கு தி.மு.க., கேள்வி
தொகுதி மறுவரையறையில் பாதிப்பு வருமா; அமித் ஷாவுக்கு தி.மு.க., கேள்வி
ADDED : ஜூன் 09, 2025 04:47 AM
சென்னை : 'லோக்சபாவில், தமிழகத்திற்கான பிரதிநிதித்துவத்தில் எந்த மாற்றமும் இருக்காது என, சட்டப்படி உத்தரவாதம் அளிக்க, உள்துறை அமைச்சர் அமித் ஷா தயாரா' என, தி.மு.க., - எம்.பி.,க்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
அதன் விபரம்:
தயாநிதி மாறன்: இந்திய அரசியலமைப்பு சட்டத்திருத்தம் 84-ன் படி, 2026க்கு பின் மேற்கொள்ளப்படும், முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், தொகுதி மறுவரையறையை மேற்கொண்டாக வேண்டும்.
அதற்காகவே, மக்கள் தொகை கணக்கெடுப்பை காலம் தாழ்த்தி வந்து, தற்போது 2027-ல் மேற்கொள்ளப்படும் என, மத்திய அரசு அறிவித்து உள்ளது.
இந்த சதியை, முதல்வர் ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறார். நியாயமான தொகுதி மறுவரையறை மேற்கொள்ள வேண்டும் என, பாதிக்கப்போகும் மாநிலங்களின் முதல்வர்கள், தலைவர்களை ஓரணியில் திரட்டி எதிர்ப்பை பதிவு செய்தார்.
அப்போதெல்லாம், முதல்வர் வீண் பதற்றத்தை உண்டாக்குகிறார் எனக்கூறி வந்தவர்களின் குட்டு, இப்போது மக்கள் முன் அம்பலப்பட்டு கிடக்கிறது.
இதோ நம் வீட்டு வாசல் வரை வந்துவிட்டது அந்த ஆபத்து. இப்போது அமித் ஷா என்ன சொல்லப் போகிறார்.
தமிழகத்தின் எம்.பி., தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்ற ஏமாற்று வார்த்தைகள் எங்களுக்கு வேண்டாம்.
லோக்சபாவில் தமிழகத்தின் பிரதிநிதித்துவ விகிதம், 7.18 சதவீதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்ற உத்தரவாதத்தை சட்டப்படி அளிக்க, அமித் ஷா தயாரா? பதில் சொல்லுங்கள் உள்துறை அமைச்சரே.
தமிழச்சி தங்கபாண்டியன்: மத்திய அரசு மக்களாட்சி என்ற மகத்தான அரணை, புல்டோசர்களை வைத்து, இடித்து தள்ளி நாசம் செய்து வருகிறது.
எவ்வித விவாதங்களும் இல்லாமல், மக்களை பாதிக்கும் சட்டங்களை கொண்டு வருவது, சர்வாதிகார போக்கோடு மாநிலங்களை வஞ்சிப்பது தொடர் கதையாகி வருகிறது.
அதன் உச்சமாக, அவர்கள் நிறைவேற்ற துடிப்பது தான், 2027ல் மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கும் லோக்சபா தொகுதி மறுவரையறை.
வரும் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை நடந்தால், லோக்சபாவில் 7.18 சதவீதம் என்ற தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் குறையுமா, குறையாதா.
தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்போவதில்லை என்றால், 2026ல் காலாவதியாகும் சட்ட திருத்தத்திற்கு மாற்றாக, மக்கள்தொகை அடிப்படையிலான, தொகுதி மறுவரையறையை தள்ளிவைக்கும் சட்ட திருத்தம் எப்போது கொண்டு வரப்படும்? பதில் சொல்லுங்கள் அமித் ஷா.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.