காங்கிரஸ் - எம்.பி.,க்களை புறக்கணிக்கும் தி.மு.க.,
காங்கிரஸ் - எம்.பி.,க்களை புறக்கணிக்கும் தி.மு.க.,
ADDED : பிப் 15, 2026 01:44 AM

பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் பரபரப்பான அரசியல் சூட்டை கிளப்பி உள்ளது. ராணுவ முன்னாள் தளபதி நரவனே எழுதிய, இன்னும் வெளிவராத புத்தகத்தை வைத்து அரசியல் நடத்தி வருகிறார், ராகுல். இன்னொரு பக்கம் காங்கிரசின் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, சுதா ஆகியோர், ஏதாவது ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் போதும், மத்திய அரசுக்கு எதிராக, பார்லி.,க்குள்ளேயே போராட்டம் நடத்துகின்றனர்.
தமிழக காங்., - எம்.பி., குறிப்பாக மாணிக்கம் தாகூர் தி.மு.க., கூட்டணியிலிருந்து காங்., வெளியே வர வேண்டும் என, பெரும் முயற்சியில் இறங்கியுள்ளார். 'ஆட்சியில் பங்கு வேண்டும்' என்பது இவரது கோஷம்.
தி.மு.க., அரசின் அறிக்கைகளுக்கு அதிரடி பதில் கொடுத்து வருவதுடன், ராகுலிடம், 'தி.மு.க., வேண்டாம்; நடிகர் விஜயின், த.வெ.க., உடன் கூட்டணி அமைப்போம்' என்றும் குரல் கொடுத்து வருகிறார். இதனால், பார்லி.,யில் தி.மு.க., - எம்.பி.,க்களுக்கும், காங்., - எம்.பி.,க்களுக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை.
மாணிக்கம் தாகூரை பார்த்தாலே தலையை திருப்பி செல்கின்றனர், தி.மு.க., - எம்.பி.,க்கள். அ.தி.மு.க., - எம்.பி.,க்களை பார்த்து புன்னகைக்கும் இவர்கள், கூட்டணி கட்சியான தமிழக காங்., - எம்.பி.,க்களை கண்டு கொள்வதில்லை.
'தி.மு.க.,வோடு கூட்டணி தொடர வேண்டும்' என, காங்., மூத்த எம்.பி.,யும், முன்னாள் அமைச்சருமான சிதம்பரம், கட்சி மேலிடத்தை வற்புறுத்தி வருகிறார். இவரிடம் தி.மு.க., - எம்.பி.,க்கள் மரியாதையாக நடந்து கொள்கின்றனர்.
ராகுலுடன், மாணிக்கம் தாகூர் நெருக்கமாக உள்ளார் என்பதால், கூட்டணியிலிருந்து காங்., கழன்று விட்டால் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகமும், தி.மு.க., - எம்.பி.,க்களிடையே நிலவுகிறதாம்.

