விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகளை வைத்தே திருமாவளவனுக்கு தி.மு.க., நெருக்கடி
விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகளை வைத்தே திருமாவளவனுக்கு தி.மு.க., நெருக்கடி
UPDATED : பிப் 13, 2026 12:04 AM
ADDED : பிப் 13, 2026 12:02 AM

'தி.மு.க., தரும் தொகுதிகளை மட்டும் வாங்கி கொள்ளலாம்' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, வி.சி., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கடந்த 2021 சட்ட சபை தேர்தலில், வி.சி.,களுக்கு ஆறு தொகுதிகளை மட்டுமே தி.மு.க., வழங்கியது. கடந்த லோக்சபா தேர்தலில், தனி சின்னத்தில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளில் வென்று, மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்று, கட்சி வளர்ந்து இருக்கிறது.
அதன்படி, சட்டசபை தேர்தலில் 10 தொகுதிகளுக்கு மேல், தி.மு.க., கூட்டணியில் வாங்க வேண்டும் என்பதுதான் வி.சி., நிர்வாகிகளின் ஆசையாக இருக்கிறது. அதைத்தான், திருமாவள வனும், தி.மு.க.,விடம் கேட்கிறார்.
ஆனால், தி.மு.க., வோ தங்களுக்கு நெருக்கமான வி.சி., நிர்வாகிகளை வைத்தே, திருமாவளவனுக்கு மறைமுக நெருக்கடி கொடுக்கிறது.
வி.சி., - எம்.பி., ரவிகுமார், எம்.எல்.ஏ.,க்கள் சிந்தனைச்செல்வன், ஷா நவாஸ், பாபு, எஸ்.எஸ்.பாலாஜி, வி.சி., துணை பொதுச்செயலர் வன்னியரசு என, மூத்த நிர்வாகிகள் பலரும் தி.மு.க.,வுடன் நெருக்கமாக இருக்கின்றனர்.
முதல்வரோடும், மூத்த அமைச்சர்களுடனும் அன்றாடம் பேசுகின்றனர். அவர்களுக்கு தேவையானதை ஆட்சியாளர்கள் வாயிலாக பெறுகின்றனர். இதனால், அவர்கள் வி.சி.,யில் இருப்பதை மறந்து, தி.மு.க.,வினராகவே மாறி விட்டனர். ஏற்கனவே, ஆட்சியில் பங்கு கேட்டு, தி.மு.க.,வுக்கு குடைச்சல் கொடுத்த ஆதவ் அர்ஜுனாவை, இந்த நிர்வாகிகளை வைத்துதான், வி.சி.,யில் இருந்து தி.மு.க., வெளியேற்றியது.
அதேபோல், தற்போது அதிக தொகுதிகளை கேட்கும் திருமாவளவனுக்கு, 'ஆறு அல்லது எட்டு தொகுதிகளே நமக்கு போதும். தி.மு.க., என்ன கொடுக்கிறதோ, அதை வாங்கிக் கொள்ளலாம்' என, அவரது கட்சியில் உள்ள இந்த நிர்வாகிகளை வைத்தே, தி.மு.க., நிர்ப் பந்தம் கொடுக்கிறது.
பா.ம.க., நிறுவனர் ராமதாசை கூட்டணிக்குள் கொண்டு வர தடை போடும் திருமாவளவனுக்கு, இந்த நிர்வாகிகளை வைத்தே, நெருக்கடி கொடுக்கப்படுகிறது. ஒருவேளை, தொகுதி பங்கீட்டில் திருமாவளவன் முரண்டு பிடித்தால், விடுதலை சிறுத்தைகள் கட்சியை உடைக்கவும் தி.மு.க., தயங்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

