கமிஷனுக்காக அதிகாரியை மிரட்டும் திமுக நிர்வாகிகள்: ஆடியோ வெளியிட்டு நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
கமிஷனுக்காக அதிகாரியை மிரட்டும் திமுக நிர்வாகிகள்: ஆடியோ வெளியிட்டு நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
ADDED : நவ 24, 2025 12:24 PM

சென்னை: கமிஷனுக்காக அதிகாரியை திமுக நிர்வாகிகள் மிரட்டுகின்றனர். கடமையைச் செய்யும் அதிகாரியை மிரட்டும் கமிஷன் மாடல் அரசு என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
அவரது அறிக்கை: சென்னை புரசைவாக்கம் பகுதியில் மெட்ரோ வாட்டர் இணைப்பு பெற்ற குடியிருப்பாளர்களிடமிருந்து லஞ்சம் வராததால், உதவிப் பொறியாளருக்குத் திமுக வட்டச் செயலாளர்கள் இருவர் பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் ஆடியோ வெளியாகியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அதிலும் வேலையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றால் இணைப்பை உடனடியாகத் துண்டிக்க வேண்டும் என அரசுப் பணியாளரை மிரட்டியுள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியது.
மேலும், இணைப்பைத் துண்டிக்கவில்லை என்றால் 'அமைச்சரை வைத்து நோண்டிவிடுவோம்' என்றும் 'மெட்ரோ வாட்டரை நாசம் செய்துவிடுவேன்' என்றும் தரக்குறைவாகப் பகிரங்கமாக அச்சுறுத்துவது திமுகவினரின் ஒட்டுமொத்த அடாவடித்தனத்தையும் வெளிப்படுத்துகிறது.
ஒரு புறம் மக்களுக்குத் தேவையான எந்தவொரு அடிப்படை வசதிகளையும் செய்யாமல் கோபாலபுரத்தின் புகழை மட்டும் பாடும் திமுக அமைச்சர்கள், மறுபுறம் தன் கடமையைச் சரிவரச் செய்யும் அரசுப் பணியாளர்களை அச்சுறுத்தி பணியை நிறுத்தி லஞ்சம், கமிஷன் என மக்களின் பணத்தை ஒட்டுண்ணியாக உறிஞ்ச திட்டமிடும் திமுக உடன்பிறப்புகள். இப்படி ஓரணியில் திரண்டு தமிழகத்தைச் சுரண்டிக் கொள்ளையடிக்கும் திமுகவினர் நம் அனைவருக்கும் ஆபத்து. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

