அண்ணாமலை வெளியிட்ட திமுக பைல்ஸ் குற்றச்சாட்டு: செய்தியாளரிடம் டிஆர் பாலு கோபம்
அண்ணாமலை வெளியிட்ட திமுக பைல்ஸ் குற்றச்சாட்டு: செய்தியாளரிடம் டிஆர் பாலு கோபம்
ADDED : ஆக 28, 2025 03:32 PM

சென்னை: அண்ணாமலை வெளியிட்ட திமுக பைல்ஸ் தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விகளால் திமுக பொருளாளர் டிஆர் பாலு கோபம் அடைந்தார். ஒரு கட்டத்தில் 'பதில் சொல்ல முடியாது போய்யா' எனக்கூறிவிட்டு சென்றார்.
2023ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி அப்போது தமிழக பாஜ தலைவராக இருந்த அண்ணாமலை, திமுக பைல்ஸ் என்ற பெயரில் திமுக பொருளாளர் டிஆர்பாலு உள்ளிட்டோரின் சொத்துக்கள் குறித்த பட்டியலை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலையிடம் ரூ.100 கோடி இழப்பு கேட்டு சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் டி.ஆர்.பாலு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு இன்று அவர் ஆஜரானார். இதன் பிறகு அவர் நிருபர்களை சந்தித்தார்.
நிருபர் : 2004ம் ஆண்டு நீங்கள் நிறைய ஊழல் செய்ததால் தான் 2009 ல் உங்களுக்கு மந்திரி பதவி கொடுக்கவில்லை என அண்ணாமலை கூறியுள்ளார். அப்போது போகாத மானம், இப்போது வெளியிட்ட திமுக பைல்ஸ் மூலம் டிஆர் பாலுவுக்கு மானம் போய்விட்டதா எனக்கூறியுள்ளார்.
பாலு: உங்களை அந்த மாதிரி கேட்க சொன்னாரா?
நிருபர்:பேட்டியே கொடுத்துள்ளார்.
பாலு: பேட்டி கொடுத்திருக்காரா? சரி அதற்கு பதில் சொல்கிறேன். சரியான நேரத்தில் பதில் சொல்கிறேன். நீங்கள் கேட்கலைல இது?
நிருபர்: அண்ணாமலை சொன்னதை தான் கேட்கிறேன்
பாலு: எந்த இடியட் சொன்னாலும், நீங்கள் கேட்கலைல?
நிருபர் : நான் கேட்கல அண்ணாமலை கூறியதை தான் கேட்கிறேன்.
பாலு: அண்ணாமலை சொல்லும் போது என்னிடம் சொல்வார். நான் பதில் சொல்கிறேன்
தொடர்ந்து, ரூ.10 ஆயிரம் கோடி குறித்து நிருபர் எழுப்பிய கேள்விக்கு, ' பதில் சொல்ல முடியாது போய்யா' எனக்கூறிவிட்டு சென்றார்.