'கனிமவள கொள்ளையின் 'காட்பாதர்' குடும்பத்துக்கு பதவிகளை தி.மு.க., வாரி வழங்குகிறது'
'கனிமவள கொள்ளையின் 'காட்பாதர்' குடும்பத்துக்கு பதவிகளை தி.மு.க., வாரி வழங்குகிறது'
ADDED : டிச 20, 2025 03:28 AM

சென்னை: 'கனிமவளக் கொள்ளையின், 'காட்பாதர்' மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, பதவிகளை வாரி வழங்கி, அவர்களை தி.மு.க., ஊக்குவிக்கிறது' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
சட்டவிரோத மணல் கொள்ளை மற்றும் கனிமவளக் கொள்ளைகளை தடுக்க, தமிழக அரசுக்கு ஆணையிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில், 'கனிமவளக் கொள்ளையைக் கட்டுப்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்கவில்லை' என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதற்கு, 1,439 கனிமவளக் குவாரிகள் சட்டவிரோதமாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், 135 வழக்குகளில், எத்தனை சட்டவிரோத குவாரிகள் சேர்க்கப்பட்டன என்ற விபரமோ, எத்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டது என்ற விபரமோ, அரசு தாக்கல் செய்த அறிக்கையில் இல்லை.
இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், 'ஒரு குவாரியில் 5 கோடி ரூபாய் அளவுக்கு கனிமவளத்தை கொள்ளையடிக்கும்போது, அதற்கு காரணமானவர்களுக்கு வெறும் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதில் என்ன பயன் இருக்கிறது' எனவும் கேள்வி எழுப்பினர்.
மேலும், அரசியல் மற்றும் பண பலத்தை வைத்து, 'மாபியா' போல கனிமவளக் கொள்ளை கும்பல்கள் செயல்படுவதாகவும் நீதிபதிகள் குற்றஞ்சாட்டினர். இது முற்றிலும் சரியானது.
தென் மாவட்டங்களில் மட்டும், தி.மு.க., ஆட்சியில், குறைந்தது 1,000 கோடி ரூபாய் அளவுக்கு கனிமவளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. யாரும் தண்டிக்கப்படவில்லை; கொள்ளையடிக்கப்பட்ட கனிமவளங்களுக்கான இழப்பீடும் பெறவில்லை.
அனைத்துக்கும் மேலாக, தென் மாவட்ட கனிமவள கொள்ளைக்கு, 'காட்பாதர்' ஆக இருப்பவருக்கும், அவர் குடும்பத்தினருக்கும் அரசிலும், அரசியலிலும் பதவிகளை வாரி வழங்கி, தி.மு.க., ஊக்குவிக்கிறது. இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

