திமுக அரசின் 3 ஆண்டு ஆட்சி சாதனை அல்ல வேதனை: இபிஎஸ்., தாக்கு
திமுக அரசின் 3 ஆண்டு ஆட்சி சாதனை அல்ல வேதனை: இபிஎஸ்., தாக்கு
ADDED : மே 08, 2024 11:08 AM

சென்னை: '' விடியா திமுக அரசின் மூன்றாண்டு ஆட்சி சாதனை அல்ல வேதனை'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த 36 மாதங்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருட்களின் கேந்திரமாக மாறியுள்ளது. போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்துவதில் ஆளுங்கட்சியின் சில நிர்வாகிகளே ஈடுபட்டது தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த உடன், மின்கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம், குப்பை வரி, பால் விலை ஆகியவை உயர்த்தப்பட்டு உள்ளன. அரிசி, காய்கறி, வீட்டு உபயோக எண்ணெய் என அத்தியாவசியப் பொருட்கள், மணல், ஜல்லி, சிமெண்ட், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் சட்டத்தின் மாட்சிமை உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆனால், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் மக்கள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் உபயோகிப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. கொலை, கொள்ளை வழிப்பறி என அதிகரித்து வரும் குற்றச் செயல்களால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆளுங்கட்சி நிர்வாகிகளால், போலீசார் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் மிரட்டப்படுகின்றனர்.
திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும், தமிழகத்தில் ஜாதி, இன துவேசங்கள் அதிகரிக்கின்றன. மின்வெட்டால், மக்கள் அல்லலுறுகின்றனர். 3 ஆண்டுகளில் 3.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி மக்களை கடனாளியாக ஆக்கியது தான் விடியா திமுக அரசின் சாதனை. 36 மாதங்களாக எந்த புது திட்டங்களும் இந்த ஆட்சியில் செயல்படுத்தப்படவில்லை. இது தான் திமுக அரசின் 3 ஆண்டுகால சோதனைகள். இன்னும் இரண்டு ஆண்டுகள் இந்த விடியா திமுக ஆட்சி தொடர்ந்து தமிழகம் படுபாதாளத்திற்கு சென்றுவிடுமோ என மக்கள் அஞ்சுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

