போதைப்பொருட்களின் புகலிடமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசு: இபிஎஸ் கண்டனம்
போதைப்பொருட்களின் புகலிடமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசு: இபிஎஸ் கண்டனம்
ADDED : மே 17, 2024 11:47 AM

சென்னை: சிந்தெடிக் போதைப்பொருட்களின் புகலிடமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இபிஎஸ் வெளியிட்ட அறிக்கை: சென்னை விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்பிலான கொக்கைன் மற்றும் எம்.டி.எம்.ஏ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. விடியா திமுக ஆட்சியில் அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம் குறித்து தொடர்ச்சியாக நான் எச்சரித்து வந்தும், இந்த அரசு அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாறாக, திமுக அயலக அணி நிர்வாகியாக இருந்த ஒருவர், சர்வதேச போதைப்பொருள் மாபியாவாக இருந்த செய்தியே வந்து சேர்ந்தது. தற்போது, சிந்தெடிக் போதைப்பொருட்களை கடத்துபவர்கள் எவ்வித அச்சமுமின்றி தமிழகத்தை போதை பொருள் மையமாக மாற்றி இருப்பதற்கு இந்த அரசே காரணியாக உள்ளது.
சிந்தெடிக் போதைப்பொருட்களின் புகலிடமாக தமிழகத்தை மாற்றிய விடியா திமுக அரசுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதுடன், இனியாவது போதைப்பொருள் தடுப்பில் விழிப்புடன் துரிதமாக செயல்படுமாறு திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

