''திமுக.,வுக்கு எதிரிகள் எக்கச்சக்கம்: கூட்டணி குஷாலா இருக்காது'': போட்டுடைத்தார் கே.என்.நேரு
''திமுக.,வுக்கு எதிரிகள் எக்கச்சக்கம்: கூட்டணி குஷாலா இருக்காது'': போட்டுடைத்தார் கே.என்.நேரு
ADDED : செப் 03, 2024 10:54 AM

திருச்சி: ''திமுக.,விற்கு தற்போது எதிரிகள் அதிகம் உள்ளனர்; லோக்சபா தேர்தலை போன்று, சட்டசபை தேர்தல் கூட்டணி சுமூகமாக அமையும் சூழல் இல்லை'' என அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளார்.
திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கூட்டணிக் கட்சிகள் பிரிந்து செல்லாத வகையில் கூட்டணியை பலமாக கட்டிக்காப்பாற்றி வருகின்றனர். அதன் வெளிப்பாடாக உள்ளாட்சி தேர்தல், லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றியை தேடித்தந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக.,வின் செயல்பாடுகளை மறைமுகமாக விமர்சித்து வருகின்றன. இதனால் கூட்டணிக்குள் பிரிவு ஏற்படும் சூழல் இருந்தாலும், அதனை திமுக தலைமை சமாளித்து வந்தது.
இந்த நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடியில் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: லோக்சபா தேர்தலை போன்று, சட்டசபை தேர்தல் கூட்டணி சுமூகமாக அமையும் சூழல் இல்லை. திமுக.,விற்கு தற்போது எதிரிகள் அதிகம் உள்ளனர். ஒருபுறம் சீமான் குறைசொல்லிக் கொண்டிருக்கிறார்; புதிதாக கட்சி துவங்கிய ஒருவர் நமக்கு எதிராக இருக்கிறார். எவ்வளவோ நன்மைகள் செய்தாலும் பாமக நம்மைப் பற்றி குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இவ்வாறு பேசியுள்ளார்.
நடிகர் விஜய் புதிதாக கட்சி துவங்கியுள்ளதால் திமுக.,விற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதேபோல், லோக்சபா தேர்தலில் குறிப்பிட்ட ஓட்டு சதவீதத்துடன் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக மாறியுள்ள சீமானின் நாம் தமிழர் கட்சியும் திமுக.,விற்கு எதிராக நிற்பதால், சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு கடினமாகவே இருக்கும் என்பதை ஒப்புக்கொள்ளும் விதமாகவே நேருவின் பேச்சு அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.