தி.மு.க., தொடர் வெற்றி பெற்றதில்லை: நயினார் நாகேந்திரன்
தி.மு.க., தொடர் வெற்றி பெற்றதில்லை: நயினார் நாகேந்திரன்
ADDED : நவ 03, 2025 09:32 PM

ஈரோடு : ''தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க., தொடர்ந்து வெற்றி பெற்றது கிடையாது, '' என்று, பா.ஜ. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
ஈரோட்டில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. தமிழகம் முழுவதும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன். 18,200 பாலியல் பலாத்காரம், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள். 15 சதவீதம், போக்சோ குற்றங்கள். 50 சதவீதம், 631 கொலை நடந்துள்ளது. இதற்கு தமிழக முதல்வர் என்ன பதில் சொல்ல போகிறார்.
ஆனால்  முதல்வருக்கு இருக்கும் ஒரே நோக்கம். தனது மகன் உதயநிதியை முதல்வராக்க வேண்டும் என்பது தான். அதற்காக கூட்டணியை எப்படி தக்க வைத்து கொள்ளலாம் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார்.
உள்ளாட்சி துறையில், 888 கோடி ரூபாய் பணி நியமன ஊழல் நடந்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. லாரி கொள்முதலில், 130 கோடி வரை ஊழல் நடந்துள்ளது. குறுவை நெல் அறுவடை நடந்து வரும் நிலையில், அரசு சார்பில் கொள்முதல் நிலையங்கள் இல்லை. மத்திய அரசின் ஆறு கொள்முதல் நிலையங்களும், தனியார் கொள்முதல் நிலையங்களும் தான் உள்ளன. தி.மு.க., அரசுக்கு கவுன்ட்டவுன் ஸ்டார்ட் ஆகி உள்ளது.
கடந்த, 1954 முதல் காங்., ஆட்சியில் ஒன்பது முறை வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி செய்யப்பட்டுள்ளது. இப்பணி தமிழக அரசின் அதிகாரிகளை கொண்டுதான் செய்யப்படுகிறது. தமிழக அரசின் தலைமை செயலர், வருவாய் துறையினர், மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் மீதே முதல்வருக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான் எஸ்.ஐ.ஆரை எதிர்க்கிறார். இதுகுறித்து முதல்வர் கூட்டிய அனைத்து கட்சி  கூட்டத்துக்கு எங்களுக்கு அழைப்பு இல்லை.
தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளில் சொன்ன எதையும் நிறைவேற்றவில்லை.  தேர்தல் வருவதால் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு, 5,000 ரூபாய் நிச்சயம் கொடுப்பார்கள். இதற்கான கோப்பு தயாராகி வருகிறது. கடந்த, 2001ல் கருணாநிதி பெரிய கூட்டணியை அமைத்தார். ஆனால் வெற்றி பெறவில்லை. ஜெயலலிதாதான் வெற்றி பெற்றார்.
தமிழகத்தில் தி.மு.க., தொடர்ந்து வெற்றி பெற்றது கிடையாது. இதனால் தி.மு.க., தில்லுமுல்லு செய்ய தயாராகி  வருகிறது. நிறைய புதிய வாக்காளர்களை சேர்த்திருக்கின்றனர். அவற்றை சரிபார்த்து நீக்க முற்படும்போது அவர்களுக்கு வருத்தம் ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

