கூட்டணி ஒற்றுமையை உறுதி செய்ய பொதுக்கூட்டம் நடத்துகிறது தி.மு.க.,
கூட்டணி ஒற்றுமையை உறுதி செய்ய பொதுக்கூட்டம் நடத்துகிறது தி.மு.க.,
ADDED : செப் 19, 2024 07:16 AM

சென்னை : கூட்டணியில் எந்த உரசலும் இல்லை என்பதை வெளிப்படுத்த, மாவட்ட வாரியாக, கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் நடத்த, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது. அதன் முதல் கூட்டம், வரும் 28ம் தேதி காஞ்சிபுரத்தில் நடக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாடும், அக்கட்சி தலைவர் திருமாவளவன், அ.தி.மு.க.,வுக்கு அழைப்பு விடுத்த விவகாரமும், தி.மு.க., கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
திருமாவளவனை அழைத்துப் பேசி, இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர், அந்த சூட்டோடு கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டத்தையும் அறிவித்து உள்ளார்.
சென்னை அறிவாலயத்தில், நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பொதுச்செயலர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த மாவட்டம்தோறும் பொதுக்கூட்டங்கள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதன்படி, கூட்டணி கட்சி தலைவர்கள் 20 பேரும் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம், வரும் 28ல் காஞ்சிபுரத்தில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.