பிரதமரை இழிவுபடுத்திய திமுக; நயினார் நாகேந்திரன் காட்டம்
பிரதமரை இழிவுபடுத்திய திமுக; நயினார் நாகேந்திரன் காட்டம்
ADDED : ஜன 27, 2026 01:25 PM

சென்னை: அரசியல் நாகரிகமற்ற அறிவாலயம் விரைவில் அழியும் என பிரதமர் மோடி குறித்து அவதூறு திமுக நிர்வாகி பேசியிருப்பதற்க்கு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை: ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கட்சி நிகழ்வில் பிரதமர் மோடி குறித்து திமுக மாநில வர்த்தகர் அணிச் செயலாளர் காசி முத்து மாணிக்கம் ஆட்சேபிக்கத்தக்க வகையில் கொச்சையாகப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசியல் நாகரிகமற்ற அறிவாலயம் விரைவில் அழியும்.
தேசத்தின் உயரிய பதவியில் இருக்கும் தலைவரைக் குறித்து பொது மேடையில் மலினமாகப் பேசுவதும், அதனை மேடையில் இருப்போரும், சுற்றி இருப்போரும் கைத்தட்டிச் சிரித்து ரசிப்பதும் ஒட்டுமொத்த திமுக உடன்பிறப்புகளின் குரூரப் போக்கை வெளிப்படுத்துகிறது.
பிரதமரைக் குறித்து தகாத வாரத்தையில் பேசுவதில் தொடங்கி பிரதமருக்குக் கொலைமிரட்டல் விடுப்பது வரை தொடர்ந்து அரசியல் மாண்பின் எல்லையை மீறி நடந்து கொள்ளும் திமுகவின் கீழ்த்தரமான போக்கை, இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது.
பிரதமரை இழிவுபடுத்தியதற்கு திமுக மாநில வர்த்தகர் அணிச் செயலாளர் உடனடியாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். உலகமே போற்றும் தலைவரை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகக் கொச்சையாகத் தூற்றும் திமுக மொத்தமாக அழியும் நாள் தூரமில்லை. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

