நீதிபதிகளை அச்சுறுத்துவது தி.மு.க., அல்ல: ரகுபதி
நீதிபதிகளை அச்சுறுத்துவது தி.மு.க., அல்ல: ரகுபதி
ADDED : டிச 13, 2025 06:48 AM

புதுக்கோட்டை: ''நீதிபதிகளை அச்சுறுத்துவது தி.மு.க., அல்ல,'' என கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில், அவர் அளித்த பேட்டி: இந்தியாவில் மகளிர் உரிமை தொகை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகம் மட்டும் தான் நிபந்தனைகளை தளர்த்தி, விண்ணப்பித்தோரில் பெரும்பாலானோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
எஸ்.ஐ.ஆர்., பணி கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது. 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மிச்சமிருக்கும் வாக்காளர்களில் பெரும்பாலானோர் எங்களுக்குத்தான் ஓட்டளிப்பர்.
நீதிபதியை அச்சுறுத்தும் இயக்கம் தி.மு.க., அல்ல. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் வைக்கப்பட்டது சர்வே கல். அங்கே தீபம் ஏற்றப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
தி.மு.க.,வினர் எப்போதும் நீதியை மதிக்கக்கூடியவர்கள். அதனால், யாரையும் அச்சுறுத்த மாட்டோம். ஆன்மிகத்துக்கும் தமிழக அரசு தான் புத்துணர்வு அளிக்கிறது. யாரையும் நசுக்க வேண்டிய அவசியமில்லை.
தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி கலகலத்து போய் உள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியினர், நடிகர் விஜய் அப்பா சந்திரசேகரை சந்தித்துப் பேசுவதால், எந்த விளைவும் ஏற்படப் போவதில்லை. தி.மு.க., கூட்டணியில் இருந்து ஒரு செங்கலை கூட உருவ முடியாது.
தமிழகத்துக்கு மோடியும், அமித் ஷாவும் எத்தனை முறை வந்தாலும், பா.ஜ.,வுக்கு தோல்விதான் மிஞ்சும். இவ்வாறு அவர் கூறினார்.

