திருமாவளவனை அடியாள் போல தி.மு.க., பயன்படுத்துகிறது: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு
திருமாவளவனை அடியாள் போல தி.மு.க., பயன்படுத்துகிறது: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு
ADDED : ஜன 26, 2026 03:06 AM

சென்னை: ''திருமாவளவனை அடியாள் போல, தி.மு.க., பயன்படுத்துகிறது,'' என, த.வெ.க., தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
மாமல்லபுரத்தில் நேற்று நடந்த, த.வெ.க., செயல் வீரர்கள் கூட்டத்தில், அவர் பேசியதாவது:
தேர்தல் கமிஷனில், விஜய் ரசிகர் இருந்து கையெழுத்து போட்டதால், நமக்கு விசில் சின்னம் கிடைத்திருக்கிறது. தி.மு.க., அமைச்சர்கள், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில், த.வெ.க., 'ஸ்லீப்பர் செல்' இருக்கின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், என்னை திட்டிக் கொண்டே இருக்கிறார். அவரது கட்சி த.வெ.க.,வுக்கு மாறி விட்டது. தற்போது, அவருடன் 20 பேர் தான் அங்கு இருக்கின்றனர். திருமாவளவனை அடியாள் போல் தி.மு.க., பயன்படுத்துகிறது.
கடந்த 2021க்கு பின், திராவிடம் என்பதற்கு முன், 'திருட்டு' என்பதை இணைத்து, 'திருட்டு தி.மு.க.,'வாக்கி விட்டனர். இந்த ஆட்சியில் என்ன சாதனை செய்து விட்டனர்; அதை முறியடிக்கப் போவதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். த.வெ.க., தலைவர் விஜயின் பெயரை சொல்வதற்கே, ஸ்டாலின் பயப்படுகிறார்.
வி.சி., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர், தி.மு.க.,வை 'ஊழல் செய்யாத கட்சி' என சொல்வரா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இரண்டு நிமிடம், ஈ.வெ.ரா-மசாமி பற்றி பேசினால், துாக்கு மாட்டிக் கொள்கிறேன். வரும் தேர்தலில், 5,000 கோடி ரூபாயை இறக்கி, ஓட்டுக்கு 2,000 ரூபாய் கொடுப்பர்.
இவ்வாறு அவர் பேசினார்.
பொதுச்செயலர் ஆனந்த் பேசியதாவது:
தொண்டர்கள் மட்டுமின்றி, பொது மக்களும், இப்போது விசில் அடிக்கின்றனர். அடுத்த முதல்வர் விஜய் தான் என, வாயால் சொன்னால் மட்டும் போதாது. சட்டசபை தேர்தலின்போது கடைசி வரை பூத்தில் இருக்க வேண்டும்.
ஓட்டுப்பதிவு நாளன்று, கடைசி நேரத்தில், நீங்களும் 20 கள்ள ஓட்டு போட்டுக் கொள்ளுங்கள் என சொல்வர்; அதை செய்யாதீர்.
உங்களை நம்பியே, சினிமாவில் உச்சத்தை விட்டு, விஜய் வந்திருக்கிறார். அவருக்காக உழைத்து, கைமாறு செய்யவேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

