புதுச்சேரியில் தி.மு.க., தலைமையில் கூட்டணி: முதல்வரிடம் கட்சியினர் வலியுறுத்தல்
புதுச்சேரியில் தி.மு.க., தலைமையில் கூட்டணி: முதல்வரிடம் கட்சியினர் வலியுறுத்தல்
ADDED : மார் 18, 2026 07:12 AM

சென்னை: 'புதுச்சேரியில், கூட்டணிக்கு தி.மு.க., தலைமை வகிக்க வேண்டும்,' என, வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற அம்மாநில கட்சி நிர்வாகிகள், முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம், நேற்று முதல் நேர்காணல் துவங்கியது.
புதுச்சேரியில், 30 தொகுதிகளில் விருப்ப மனு அளித்த 120 பேரிடம், முதல்வர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.
சென்னை அறிவாலயத்தில் நடந்த நேர்காணலில், கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலர் கே.என்.நேரு, அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் பங்கேற்றனர்.
விருப்ப மனு அளித்தவர்களிடம், வெற்றி வாய்ப்பு நிலவரம், ஜாதி செல்வாக்கு, சொந்த செல்வாக்கு, கட்சி பணிகள் என பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
அப்போது நிர்வாகிகள் சிலர், 'தமிழகத்தை போல, புதுச்சேரியிலும், தி.மு.க., தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். கட்சி தலைமை விரும்பினால், தனித்து போட்டியிடவும் தயாராக இருக்கிறோம்' என, வலியுறுத்தியுள்ளனர்.
புதுச்சேரியில், தி.மு.க., - காங்., இடையே, இன்னும் தொகுதி பங்கீடு பேச்சில் இழுபறி நீடிக்கிறது. கூட்டணிக்கு, 'தி.மு.க., தலைமை வகிக்க வேண்டும்,' என்ற கோஷத்தை, புதுச்சேரி தி.மு.க.,வினர் எழுப்பியுள்ளனர்.
அதை, காங்கிரஸ் ஏற்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலையில், நேர்காணலின்போது, ஸ்டாலினிடம் நேரில் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து, புதுச்சேரி தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தில், தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், கூட்டணி ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்தது. அதற்கு தி.மு.க., மறுத்து விட்டது.
இந்த நிலையில், புதுச்சேரியில் தி.மு.க., தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, நாங்கள் முன்வைத்தோம்.
அதற்கு, முதல்வர் ஸ்டாலின், 'கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்' என்றார்.
தமிழகத்தை போலவே, புதுச்சேரியிலும் நல்லாட்சி தேவை என, அம்மாநில மக்கள் விரும்புகின்றனர்; ஆட்சி மாற்றத்தையும் விரும்புகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

