நட்சத்திர பேச்சாளரை தி.மு.க., இழந்தது: கவர்னர் ரவி மாற்றம் குறித்து கிண்டல்
நட்சத்திர பேச்சாளரை தி.மு.க., இழந்தது: கவர்னர் ரவி மாற்றம் குறித்து கிண்டல்
ADDED : மார் 07, 2026 12:41 AM

சென்னை: தமிழக கவர்னர் ரவி திடீரென மாற்றப்பட்டுள்ளது குறித்து, தி.மு.க., - காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைதளங்களில் கிண்டல் விமர்சனம் செய்துள்ளனர்.
தமிழக கவர்னர் ரவி, மேற்கு வங்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். கேரள கவர்னராக உள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், கூடுதலாக தமிழக கவர்னர் பணியை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக கவர்னராக இருந்த ரவி, தி.மு.க.,வுக்கும், அரசுக்கும் எதிராக செயல்பட்டு வந்தார். துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட பல விவகாரங்களில், அரசுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகள் எடுத்தார். முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அரசின் தவறுகளை அடிக்கடி சுட்டிக்காட்டினார்.
தமிழக சட்டசபையில், கவர்னர் உரை துவங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அதை சபாநாயகர் ஏற்காததால், மூன்று ஆண்டுகளாக சட்டசபையில் உரை நிகழ்த்துவதையும் கவர்னர் ரவி தவிர்த்தார்.
தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் எதிராக கவர்னர் ரவி செயல்படுவதாக, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.
கவர்னரின் செயல்பாடுகள், தமிழக மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகவும், அது தங்களுக்கு சாதகமாக இருப்பதாகவும், முதல்வர் ஸ்டாலின் கூறி வந்தார்.
'கவர்னர் ரவி தமிழகத்தில் பணிபுரிந்தால், அது தங்கள் வெற்றியை எளிதாக்கி விடும்' எனவும் கூறினார்.
இந்நிலையில் கவர்னர் ரவி, மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார். இதை, தி.மு.க., - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் விமர்சித்துள்ளனர்.
தி.மு.க., - எம்.பி., வில்சன் வெளியிட்ட பதிவு:
இரண்டு விஷயங்களுக்காக நான் வருத்தப்படுகிறேன். முதலாவதாக, வரும் சட்டசபை தேர்தலில், நட்சத்திர பிரசார பேச்சாளரை தி.மு.க., இழந்துள்ளது. தமிழகத்தில் பா.ஜ.,வின் எண்ணங்களை, கவர்னர் ரவி தொடர்ந்து நினைவூட்டி வந்தார்.
இரண்டாவதாக, மேற்கு வங்க மக்களுக்காகவும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் உள்ள எனது நல்ல நண்பர்களுக்காகவும் வருத்தப்படுகிறேன்.
கவர்னர் ரவி எங்கு சென்றாலும், அரசியலமைப்பு, கூட்டாட்சி அமைப்பு மற்றும் பார்லிமென்ட் ஜனநாயகம்தான் பலியாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

