தி.மு.க., அமைச்சரின் சொத்து குவிப்பு வழக்கு; ஈ.டி., நோட்டீசை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு
தி.மு.க., அமைச்சரின் சொத்து குவிப்பு வழக்கு; ஈ.டி., நோட்டீசை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு
ADDED : ஜன 28, 2026 03:36 AM

சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் ஈ.டி., எனப்படும், அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து தி.மு.க., அமைச்சர் பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
கடந்த 2006 - 11 தி.மு.க., ஆட்சியில் தமிழக வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்தவர் பெரியசாமி.
அவரது பதவி காலத்தில், 2.35 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக ஊழல் தடுப்பு போலீசார் அவர் மீதும் அவரது மனைவி சுசீலா, மகன்கள் செந்தில்குமார், பிரபு ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அமைச்சர் பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லாததால், அனைவரையும் வழக்கில் இருந்து விடுவிப்பதாக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக ஊழல் தடுப்பு பிரிவு போலீசார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
இதை எதிர்த்து பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே இதே வழக்கு விசாரணையின் அடிப்படையில், அமைச்சர் பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.
மேலும், அவர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி, வங்கி கணக்குகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தது. மேலும் இது தொடர்பாக விளக்கம் கேட்டு வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நோட்டீசை ரத்து செய்ய கோரி பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை கடந்த 6ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி தீபங்கர் தத்தா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய மறுத்த நீதிபதிகள், அமைச்சர் பெரியசாமியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -:

