டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்க்கும் தி.மு.க., அரசு கடலில் கனிமவளம் எடுக்க அனுமதி தந்தது ஏன்?
டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்க்கும் தி.மு.க., அரசு கடலில் கனிமவளம் எடுக்க அனுமதி தந்தது ஏன்?
ADDED : ஜன 12, 2025 12:39 AM

ராமநாதபுரம்: 'மதுரை, அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முதல்வர் ஸ்டாலின், கடலில் கற்றாலைக்கும், கனிம வளம் எடுப்பதற்கும் கையெழுத்திட்டது ஏன்?' என, தேசிய பாரம்பரிய மீனவர்கள் சங்க மாநிலத்தலைவர் சின்னத்தம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை:
மதுரை, அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். துவக்கத்தில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஆதரவாக செயல்பட்ட தமிழக அரசு, மக்களின் எதிர்ப்பு காரணமாக தற்போது செயல்படுத்த மாட்டோம், எனக்கூறி வருகிறது.
இதே முதல்வர், தமிழக கடலில் கனிமம் தோண்ட அனுமதி வழங்கியுள்ளார். கன்னியாகுமரி முதல் நாகப்பட்டினம் வரை, 30,000 கோடி ரூபாயில் கடலில் காற்றாலை திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் சுரங்கம் போன்றவற்றிற்கு தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடலில் கனிம சுரங்கம் தோண்டும் போது, பல நுாறு கி.மீ., கடல் வளம் முழுதும் அழிந்து விடும். கடலியல் சூழல் பாதிக்கப்படும்.
கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து விடும். கடலை நம்பி வாழும் 60 லட்சம் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். கடலியல் சமன்பாடு சிதைக்கப்படும் போது, இயற்கை பேரழிவு தடுக்க முடியாமல் போகும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சுரங்க அனுமதியை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு அந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் மீனவர்கள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.