மதுரையில் தொகுதி ஒதுக்கும் முன்பே போஸ்டர் ஒட்டி ஓட்டு கேட்கும் காங்.,: 'கை' மீறி போவதால் தி.மு.க.,வினர் கொதிப்பு
மதுரையில் தொகுதி ஒதுக்கும் முன்பே போஸ்டர் ஒட்டி ஓட்டு கேட்கும் காங்.,: 'கை' மீறி போவதால் தி.மு.க.,வினர் கொதிப்பு
UPDATED : ஜன 30, 2026 06:21 AM
ADDED : ஜன 30, 2026 04:16 AM

மதுரை: மதுரை தி.மு.க., எம்.எல்.ஏ., தளபதியின் வடக்கு தொகுதி முழுவதும் 'காங்., வேட்பாளருக்கு ஓட்டளியுங்கள்' என காங்., தலைவர் ராகுல் படத்துடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் கூட்டணிக்குள் மீண்டும் உரசல் ஏற்பட்டுள்ளது.
தளபதி எம்.எல்.ஏ., மதுரை தி.மு.க., நகர் செயலாளராகவும் உள்ளார். வரும் தேர்தலில் இவரது வடக்கு தொகுதியை காங்., கேட்பதால் கடுப்பான தளபதி, பொதுக்கூட்டம் ஒன்றில், 'காங்., எம்.பி.,க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றோர் ஆட்சியில் பங்கு கேட்டு கூட்டணியை குழப்புகின்றனர்.
3 ஆயிரம் ஓட்டு உள்ள காங்.,கில் பூத் கமிட்டிக்குக்கூட ஆள் இல்லை. தி.மு.க., இல்லையென்றால் 'இண்டி' கூட்டணியே இல்லை' என கடுமையாக விமர்சித்தார்.
தளபதியின் பேச்சுக்கு மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, காங்., மாநில தலைவர் கண்டனம் தெரிவித்தனர். கூட்டணிக்குள் விரிசல் சூழல் எழுந்தது. இதனால் 'கூட்டணி குறித்து யாரும் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கக்கூடாது' என தி.மு.க., அறிக்கை வெளியிட்டது. ஆனாலும் தளபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்., தொடர்ந்து வலியுறுத்துகிறது.
உறுதியான கூட்டணி
டில்லியில் ராகுலை சந்தித்த கனிமொழி சமரசம் பேசி, வரும் சட்டபை தேர்தலில் தி.மு.க., - காங்., கூட்டணியை உறுதி செய்தார். விரைவில் தொகுதி பங்கீடு நடக்கவுள்ளது.
இந்நிலையில் 'மதுரை வடக்கு தொகுதி காங்.,' என்ற பெயரில், தொகுதி முழுவதும் 'காங்., வேட்பாளருக்கு ஓட்டளியுங்கள்' என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது தி.மு.க.,வினரை கொந்தளிக்க வைத்துள்ளது.
மதுரை நகர் காங்., தலைவர் நல்லமணி கூறுகையில், ''இந்த போஸ்டருக்கும் நகர் காங்கிரசுக்கும் தொடர்பில்லை'' என்றார்.
தி.மு.க.,வினர் கூறியதாவது: காங்கிரசை தளபதி எம்.எல்.ஏ., விமர்சித்த விவகாரத்தில் கட்சி கட்டுப்பாட்டை மதித்து தி.மு.க.,வினர் அமைதி காக்கின்றனர். ஆனால் எங்களை உசுப்பேத்தும் வகையில் காங்கிரசார் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். தளபதி வீட்டை இளைஞர் காங்., முற்றுகையிடுவர் என ஏற்கனவே மாணிக்கம் தாகூர் கூறியிருந்தார். அவரது ஆதரவாளர்களே இந்த விஷமத்தன போஸ்டர்களை ஒட்டியிருக்கலாம். இதுதொடர்ந்தால் தி.மு.க., சும்மா இருக்காது என்றனர்.

