‛‛பா.ஜ.,வினரை கைது செய்ய மட்டும் அவசரம் காட்டும் திமுக'': அண்ணாமலை கோபம்
‛‛பா.ஜ.,வினரை கைது செய்ய மட்டும் அவசரம் காட்டும் திமுக'': அண்ணாமலை கோபம்
ADDED : ஜன 24, 2024 10:58 AM

சென்னை: பா.ஜ.,வினரைக் கைது செய்வதில் மட்டும் அவசரம் காட்டுகிறது திமுக அரசு என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது: தொடர்ச்சியாக இந்து மத விரோதப் போக்கில் ஈடுபட்டு வரும் திமுக அரசு, நாட்டின் பல கோடி மக்களின் நம்பிக்கை மற்றும் பல நூறு ஆண்டுகள் காத்திருப்பை நிறைவேற்றிய, வரலாற்றுச் சிறப்புமிக்க அயோத்தி ஸ்ரீராமர் கோவில் விழாவை, தரக்குறைவாக விமர்சித்த, பொள்ளாச்சி திமுக நிர்வாகியை எதிர்த்து கண்டனக் குரல் எழுப்பிய கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி நகரத் தலைவர் பரமகுரு உள்ளிட்ட பா.ஜ., நிர்வாகிகளைக் கைது செய்திருக்கிறது.
பொதுமக்களின் அடிப்படை உரிமையான வழிபாடு உரிமைகளையும், இந்து மத நம்பிக்கையையும் புண்படுத்திய தி.மு.க.,வினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவர்கள் தவறைத் தட்டிக் கேட்ட பா.ஜ.,வினர் மீது நடவடிக்கை எடுத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
வேங்கை வயல் குற்றவாளிகளையோ, வீட்டு வேலைக்கு வந்த சிறுமியை கடுமையாகத் தாக்கித் துன்புறுத்திய தி.மு.க., எம்.எல்.ஏ குடும்பத்தினரையோ கைது செய்யவில்லை. தமிழகம் முழுவதும் சீர்குலைந்து இருக்கும் சட்டம் ஒழுங்கைக் காக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஆனால், பல கோடி மக்களின் நம்பிக்கையைப் புண்படுத்திய தி.மு.க.,வினரை எதிர்த்து, மக்களின் குரலாகப் போராடிய பா.ஜ.,வினரைக் கைது செய்வதில் மட்டும் அவசரம் காட்டுகிறது திமுக அரசு.
ஆன்மீக பூமியான தமிழகத்தில், பொதுமக்களின் இறைநம்பிக்கையைத் தரக்குறைவாக விமர்சித்துவிட்டு, எளிதில் தப்பித்து விடலாம், எதிர்த்துக் குரல் கொடுப்பவர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை ஏவி விடலாம் என்ற எண்ணத்தில் இன்னும் தி.மு.க., இருந்தால், அதை மாற்றிக் கொள்வது அவர்களுக்கு நல்லது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

