தி.மு.க., அனுதாபி ஞானசேகரன் மேலும் ஒரு வழக்கில் கைது
தி.மு.க., அனுதாபி ஞானசேகரன் மேலும் ஒரு வழக்கில் கைது
ADDED : மே 15, 2025 02:22 AM

சென்னை:அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்ட, தி.மு.க., அனுதாபி ஞானசேகரனை, மேலும் ஒரு பாலியல் வழக்கில் கைது செய்த சி.பி.சி.ஐ.டி., போலீசார், அவரை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
கடந்த டிச.,23ம் தேதி, இரவு, 8:00 மணியளவில், சென்னை கிண்டி அண்ணா பல்கலை வளாகத்தில், 19 வயது மாணவி பாலியல் வன்முறை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக, சென்னை கோட்டூர்புரம் மகளிர் போலீசார், அதே பகுதியை சேர்ந்த, தி.மு.க., அனுதாபி ஞானசேகரன், 37, என்பவரை கைது செய்தனர். சம்பவ இடத்தில், ஞானசேகரனுடன் மேலும் ஒரு முக்கிய புள்ளி இருந்ததாக, தகவல் வெளியானது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய, சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை, சென்னை அல்லிகுளம் வணிக வளாகத்தில் செயல்படும், மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதற்கிடையே, யார் அந்த சார் என, கேள்வி எழுந்ததால், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
அவர்கள் நடத்திய, தொடர் விசாரணையில், ஞானசேகரன் மேலும் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரிய வந்தது. இது தொடர்பாக, அப்பெண்ணும் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், ஞானசேகரன் மீது மேலும் ஒரு பாலியல் வழக்குப் பதிவு செய்து, அவரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஞானசேகரனை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
குற்றத்தை ஒப்புக் கொண்டதால், மீண்டும் அவரை நேற்று புழல் சிறையில் அடைத்தனர்.