பள்ளி நிர்வாகிகளை மிரட்டி வாகனங்களை எடுத்து சென்ற தி.மு.க., நிர்வாகிகள்: பழனிசாமி
பள்ளி நிர்வாகிகளை மிரட்டி வாகனங்களை எடுத்து சென்ற தி.மு.க., நிர்வாகிகள்: பழனிசாமி
ADDED : ஜன 22, 2024 03:58 AM

மேட்டூர் : சேலம் மாவட்டம், மல்லிகுந்தத்தில் நடந்த கட்சி பிரமுகர் திருமண விழாவில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார்.
முன்னதாக, மல்லிகுந்தம் பஸ் ஸ்டாப் அருகே, கட்சி கொடியை ஏற்றி, அவர் பேசியதாவது:
அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் தான் தமிழகம் வளர்ந்து தேசிய அளவில் முதலிடம் பெற்றது.
அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், 2,160 மாணவ, மாணவியருக்கு மருத்துவ கல்லுாரியில் இடம் கிடைத்துள்ளது.
சேலம் மாவட்டம் எப்போதுமே அ.தி.மு.க., கோட்டையாக உள்ளது. அதில், எந்த கட்சியினரும் நுழைய முடியாது.
அதனால் தான் இளைஞர் அணி மாநாட்டை, இரு முறை தள்ளி வைத்து மூன்றாவது முறையாக நடத்துகிறதுதி.மு.க.,
சேலம் மாவட்டத்தில் வறண்ட பகுதிகளில் பயிர் சாகுபடி செய்வதற்காக மேட்டூர் அணை உபரி நீரை நிரப்பும், 100 ஏரி பாசன திட்டத்தை, தி.மு.க., அரசு கிடப்பில் போட்டு விட்டது.
அதுபோல, பள்ளி மாணவர்கள் உயர் கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக வழங்கப்பட்ட மடிகணினி திட்டத்தையும் முடக்கி விட்டது.
தேர்தல் சமயத்தில், 500 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கூறிய, விடியா அரசு சில வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளது.
மேலும், சேலம் தி.மு.க., இளைஞர் அணி மாநில மாநாட்டுக்கு அழைத்து செல்வதற்காக, மாவட்டம் முழுதும் பள்ளி, கல்லுாரி நிர்வாகிகளை மிரட்டி பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களை எடுத்து சென்று, மாநாட்டில் பங்கேற்க கட்சியினரை, தி.மு.க., நிர்வாகிகள் அழைத்து சென்றுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
இவ்வாறு பழனிசாமி பேசினார்.