முதல்வர் இல்லம் நோக்கி பேரணி: தி.மு.க., தொழிற்சங்கம் அறிவிப்பு
முதல்வர் இல்லம் நோக்கி பேரணி: தி.மு.க., தொழிற்சங்கம் அறிவிப்பு
UPDATED : ஜன 22, 2026 05:52 AM
ADDED : ஜன 22, 2026 03:51 AM

சென்னை: முறையாக சம்பளம் வழங்காததை கண்டித்து, முதல்வர் இல்லம் நோக்கி, பேரணி நடத்தப் போவதாக, தி.மு.க.,வின், தமிழ்நாடு, 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து, அச்சங்கத்தின் செயலர் இருளாண்டி கூறியதாவது: தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை, இ.எம்.ஆர்.ஐ., கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. கடந்த, 2024ல், 16 சதவீதமாக ஊதிய உயர்வு வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு, 10 சதவீதம் வழங்கப்பட்டது.
மேலும், மாத ஊதியம் முறையாக வழங்கப்படுவதில்லை. இரண்டு, மூன்று தவணைகளில் வழங்கப்படுகிறது. அத்துடன், 8 மணி நேர பணி நேரத்தை தாண்டி பணியாற்ற வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து, அமைச்சர், துறை செயலர், 108 ஆம்புலன்ஸ் நிர்வாகி போன்றோருக்கு, தகவல் தெரிவித்தும் பயனில்லை.
இதுகுறித்து அதிகாரி களிடம் கேட்டால், 'தனியார் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படுகிறது. உங்களுக்கு ஊதியத்தை உயர்த்தி தந்தால், அவர்கள் ஒப்பந்தத்தை விட்டு வெளியேறுவதாக கூறுகின்றனர்' என்கின்றனர்.
அவர்கள் சென்றாலும், 108 ஆம்புலன்ஸ் சேவையை ஏற்று நடத்த, பல தனியார் நிறுவனங்கள் முன்வரும். அரசு கூட ஏற்று நடத்தலாம். ஆனால், தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக அதிகாரிகள் இருப்பதால், இந்த போராட்டத்தை அறிவித்து உள்ளோம்.
ஆளும் கட்சி சங்கமாக இருந்தாலும், போராட்டம் நடந்தால் தான் தீர்வு வரும் என்பதால், வரும், 30ம் தேதி கோவையில் உண்ணாவிரதப் போராட்டம், பிப்., முதல் வாரத்தில் டி.எம்.எஸ்., வளாகத்தில் இருந்து, முதல்வர் இல்லம் நோக்கி பேரணி நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

