அரசிடம் பேச்சு நடத்தியும் தீர்வு இல்லை 2வது நாளாக டாக்டர்கள் உண்ணாவிரதம்
அரசிடம் பேச்சு நடத்தியும் தீர்வு இல்லை 2வது நாளாக டாக்டர்கள் உண்ணாவிரதம்
ADDED : ஜன 30, 2026 06:46 AM
சென்னை: அமைச்சர், அரசு செயலரிடம் பேச்சு நடத்தியும் தீர்வு ஏற்படாததால், இரண்டாவது நாளாக, அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'ஊதியம் உயர்வு, பதவி உயர்வு வழங்க வேண்டும். ஊக்கத்தொகை, 3,000 ரூபாய் வழங்க வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை, அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இவற்றை நிறைவேற்றக் கோரி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை வளாகத்தில், அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர், 48 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை, நேற்று முன்தினம் துவக்கினர். அவர்களுடன் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், செயலர் ஆகியோர் பேச்சு நடத்தினர்; அதில், தீர்வு ஏற்படாததால், உண்ணாவிரத போராட்டத்தை, டாக்டர்கள் தொடர்ந்தனர்.
இதுகுறித்து, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பாலகிருஷ்ணன், ராமலிங்கம் ஆகியோர் கூறியதாவது:
உண்ணாவிரத போராட்டம், இன்று காலை வரை நடக்க உள்ளது. அதன்பின், ஒரு வாரம் தொடர் போராட்டம் நடத்தப்படும். குறிப்பாக, 'பயோமெட்ரிக்' வருகை பதிவேட்டை தவிர்த்தல், அலுவல் சார்ந்த கூட்டங்களை புறக்கணித்தல், அலுவலக 'வாட்ஸாப்' குழுக்களில் இருந்து வெளியேறுதல் ஆகிய போராட்டங்கள் தொடரும்.
அதன்பின்னும், கோரிக்கைகளை ஏற்காவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

