முதுமலையில் விநாயகர் சதுர்த்தி விழா: கஜமுகனை வணங்கிய வளர்ப்பு யானைகள்
முதுமலையில் விநாயகர் சதுர்த்தி விழா: கஜமுகனை வணங்கிய வளர்ப்பு யானைகள்
ADDED : ஆக 28, 2025 06:19 AM

கூடலுார்: முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், வளர்ப்பு யானைகள் மணி அடித்து, கோவிலை சுற்றி வலம் வந்து கஜமுகனை வணங்கின.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில், விநாயகர் சதுர்த்தி விழா நேற்று மாலை நடந்தது. இதற்காக வளர்ப்பு யானைகள் மாயார் ஆற்றில் குளிக்க வைத்து அலங்கரித்து மாலை அணிவித்து, வரிசையில் நிறுத்தப்பட்டன.
விழாவை முன்னிட்டு, அங்குள்ள விநாயகர் கோவிலில் பழங்குடியினர் தங்கள் பாரம்பரிய முறைப்படி பூஜைகள் செய்தனர். தொடர்ந்து வளர்ப்பு யானைகள் கிருஷ்ணா, பொம்மி ஆகியவை, தும்பிக்கையில் கோவில் மணியை பிடித்து அடித்தப்படி, கோவிலை மூன்று முறை சுற்றி வந்து விநாயகரை வணங்கின.
கோவில் முன் வரிசையாக நின்ற வளர்ப்பு யானைகள் தும்பிக்கையை உயர்த்தியபடி விநாயகரை வணங்கின. இதன்பின், வளர்ப்பு யானைகளுக்கு வழங்கப்படும் வழக்கமான உணவுடன், பொங்கல், பழங்கள் வழங்கப்பட்டன. விழாவில், வனச்சரகர்கள் மேகலா, குலோதுங்கசோழன், பாஸ்கர், வன ஊழியர்கள் மற்றும் திரளான சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.