தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'அண்ணாதுரை பற்றி எங்களுக்கு தி.மு.க., பாடம் எடுக்க வேண்டாம்'

'அண்ணாதுரை பற்றி எங்களுக்கு தி.மு.க., பாடம் எடுக்க வேண்டாம்'

'அண்ணாதுரை பற்றி எங்களுக்கு தி.மு.க., பாடம் எடுக்க வேண்டாம்'


ADDED : ஜூன் 27, 2025 07:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2025 07:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'ஒரு நாள், ஒரு நொடி கூட, அண்ணாதுரையை விட்டுக்கொடுக்க மாட்டோம்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

நான்காண்டு கால ஆட்சியில், மக்களுக்கு ஒன்றுமே செய்யாத முதல்வர், 'போட்டோஷூட்' மேடை போட்டு, அரசு விழா என்ற பெயரில் அரசியல் பேசுகிறார். அ.தி.மு.க.,வை பற்றியே புலம்பிக் கொண்டிருக்கிறார்.

குடும்ப கொள்கை

அந்த வரிசையில், திருப்பத்துாரில் பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின், 'அண்ணாதுரை பெயரை அ.தி.மு.க., அடமானம் வைத்துவிட்டது' என்கிறார். அண்ணாதுரை பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கும், தி.மு.க.,வுக்கும் கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா?

'அண்ணா- இதய மன்னா' என்று கண்ணீர் வடித்த கையோடு, அவர் கொள்கைகளை குழிதோண்டி புதைத்து, அண்ணாதுரையின் கட்சியையும், ஆட்சியையும் கபளீகரம் செய்து, குடும்பக் கொள்ளையின் கூடாரமாக தி.மு.க.,வை மாற்றியவர் கருணாநிதி.

அதன் விளைவாக, அண்ணாதுரையின் கொள்கை விழுமியங்களை நெஞ்சில் ஏந்திய அவரின் இதயக்கனி எம்.ஜி.ஆரால் துவங்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க.,

ஒரு நாள், ஒரு நொடி கூட, எங்கள் பெயரிலும் கொடியிலும் மட்டுமல்ல, எங்கள் குருதியிலும் குடியிருக்கும் அண்ணாதுரையை விட்டுக்கொடுக்க மாட்டோம்.

பகல்வேஷக் கட்சி

அண்ணாதுரையின் கொள்கைகளுக்கு மாறாக குடும்ப ஆட்சி நடத்தும் ஸ்டாலின், எங்களுக்கு ஈ.வெ.ரா., அண்ணாதுரை பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இன்று, வானத்திற்கும் பூமிக்கும் குதித்து முழங்கும் ஸ்டாலினுக்கு, 1999 முதல் 2004 வரையிலான காலகட்டத்தில், மத்தியில் பதவி சுகத்தை அனுபவிக்கும் போதெல்லாம் தெரியாதா; யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்?

கச்சத்தீவு முதல் காவிரி வரை தமிழகத்தை, அதன் உரிமைகளை அடகு வைத்ததும், வைக்கத் துணிவதும் தி.மு.க.,தான். தன்மானமிக்க தமிழக மக்கள், பகல்வேஷக் கட்சியான தி.மு.க.,வை, வரும் 2026ல் நிச்சயம் விரட்டியடிப்பர்.

தி.மு.க.,வால் பறிபோன தமிழகத்தின் அமைதி, வளம், வளர்ச்சி, மாநில உரிமை என அனைத்தையும் நான் மீட்டு தருவேன். இதுவே, தமிழக மக்களுக்கு நான் அளிக்கும் முதல் வாக்குறுதி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us