வேலூரில் சிறுவர்கள் இரட்டைக்கொலை.. நண்பனின் குழந்தைகளை கொன்ற நபர் கைது; பின்னணியில் பகீர்
வேலூரில் சிறுவர்கள் இரட்டைக்கொலை.. நண்பனின் குழந்தைகளை கொன்ற நபர் கைது; பின்னணியில் பகீர்
UPDATED : செப் 20, 2024 11:20 AM
ADDED : செப் 20, 2024 08:19 AM

குடியாத்தம்: வேலூரில் நண்பனின் குழந்தைகளை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கட்டட ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார்.
குடியாத்தம் அருகே உள்ள ஏரிப்பட்டியைச் சேர்ந்தவர் வசந்த குமார். கட்டட ஒப்பந்ததாரரான இவர், தனது நண்பர்களிடம் பணம் கொடுக்கல், வாங்கல் செய்து வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், நேற்றிரவு நண்பன் யோகராஜின் குழந்தைகளான யோகித் (5), தர்ஷன் (4) ஆகியோரை வசந்தகுமார் கடைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, வீட்டில் இருந்து கூப்பிட்டுச் சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் கடைக்குச் சென்றவர்கள் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த பெற்றோர், வசந்தகுமாரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் அதிர்ச்சியடைந்து தேடிச் சென்றுள்ளனர்.
அப்போது, அங்குள்ள கோவில் அருகே குழந்தைகள் இருவரும் கொலை செய்யப்பட்டு, சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வசந்தகுமாரை தேடிப்பிடித்து கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், யோகராஜ் வாங்கிய ரூ.14,000 பணத்தை திருப்பிக் கொடுக்காததால், ஆத்திரத்தில் அவரது குழந்தைகளை வசந்தகுமார் கொலை செய்யததாக சொல்லப்படுகிறது. அதேவேளையில், கோயில் அருகே குழந்தைகளின் சடலம் கிடந்ததால், நரபலி கொடுக்கப்பட்டதா? என்ற சந்தேகமும் அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.