இரட்டிப்பானது கொரோனா பரவல் முகக்கவசம் அணிவது அவசியம்
இரட்டிப்பானது கொரோனா பரவல் முகக்கவசம் அணிவது அவசியம்
UPDATED : ஜன 07, 2024 03:44 AM
ADDED : ஜன 06, 2024 09:27 PM

சென்னை:'கொரோனா தொற்று பரவல் இரட்டிப்பாகி உள்ளதால், பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்' என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில், ஜே.என்.1.1, -- எக்ஸ்.பி.பி., -- பி.ஏ.2 உள்ளிட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று பரவி வருகிறது.
இதில், தினசரி சராசரியாக 20 பேர் பாதிக்கப்பட்டு வந்தனர். தற்போது தினசரி பாதிப்பு, 40 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், கொரோனா தொற்று பாதிப்பால், கடந்த 28ம் தேதி முதல் இதுவரை, ஐந்து பேர் வரை உயிரிழந்துஉள்ளனர்.
தொடர்ந்து பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரிக்கும் சூழலில், பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என, பொது சுகாதாரத்துறைஅறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சில மாதங்களாக கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்தது. ஆங்காங்கே ஓரிருவர் பாதிக்கப்பட்டாலும், உயிரிழப்பு ஏற்படவில்லை.
தற்போது தொற்று பாதிப்பு அதிகரிப்பதுடன், நாள்பட்ட இணை நோய் உள்ளவர்கள் உயிரிழக்கும் சூழ்நிலை உள்ளது.
எனவே, பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
குறிப்பாக, புத்தக கண்காட்சி, சந்தை பகுதிகள், பள்ளி, கல்லுாரிகள் உள்ளிட்ட இடங்களில் முகக்கவசம் அணிவதன் வாயிலாக தொற்றை கட்டுப்படுத்த முடியும். மேலும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.