"திராவிடம்' என்ற சொல் கெட்டவார்த்தை: ராமதாஸ் புது அர்த்தம்
"திராவிடம்' என்ற சொல் கெட்டவார்த்தை: ராமதாஸ் புது அர்த்தம்
UPDATED : ஆக 13, 2011 03:02 AM
ADDED : ஆக 11, 2011 11:28 PM

கிருஷ்ணகிரி: ''திராவிடம் என்ற சொல்லை, நாங்கள் கெட்ட வார்த்தையாக கருதுகிறோம்.
இனி வரும் தேர்தல்களில், பா.ம.க., தனித்து போட்டியிடும் என்ற நிலையில், 'மக்களுக்காக அரசியல்' என்ற செயல் திட்டத்தை, ஒரு மாதத்தில் சென்னையில் வெளியிட உள்ளோம்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் அடுத்த ஆண்டில் இருந்து, முழுமையான சமச்சீர் கல்வி திட்டத்தை, நடைமுறைப்படுத்த வேண்டும். காமராஜர் காலத்தில், 12 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் மட்டுமே இருந்தது. திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின், 11 ஆயிரம் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் துவங்கப்பட்டன. திராவிட கட்சிகள், கல்வியை கொள்ளையர்களுக்கு தாரை வார்த்துவிட்டன.
சமச்சீர் கல்வி முழுமையாக செயல்படுத்தப்பட்டால், மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு வேலையே இல்லை. 1,200 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு பூட்டி வைக்கப்பட்டுள்ள தலைமைச் செயலக கட்டடத்தை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வேண்டும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருடன் கூட்டணி வைப்பது குறித்து நாங்கள் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். 'திராவிடம்' என்ற சொல்லை நாங்கள் கெட்ட வார்த்தையாக கருதுகிறோம். இனி வரும் தேர்தல்களில், பா.ம.க., தனித்து போட்டியிடும் என்ற நிலையில், 'மக்களுக்காக அரசியல்' என்ற செயல்திட்டத்தை ஒரு மாதத்தில் சென்னையில் வெளியிட உள்ளோம். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.