இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.300 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது, ஒருவர் தலைமறைவு
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.300 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது, ஒருவர் தலைமறைவு
ADDED : மார் 09, 2026 04:25 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக மினிவேனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்த க்யூ பிரிவு போலீசார், இருவரை கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை கிராமங்களில் இருந்து இலங்கைக்கு நாட்டுப்படகுகளில் போதைப்பொருட்கள் கடத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மண்டபம் தெற்கு கடல் பகுதி வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்பட உள்ளதாக ராம நாதபுரம் க்யூ பிரிவு போலீசாருக்கு நேற்று அதிகாலை தகவல் கிடைத்தது.
க்யூ பிரிவு இன்ஸ்பெக்டர் ஜீவமணி தலைமையில், க்யூ பிரிவு, போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் இணைந்து மதுரை--தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காரிக்கூட்டம் பஸ் ஸ்டாப்பில் சோதனை நடத்தினர்.
அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது அதில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். வாகனத்தின் இருக்கைகளை ஆய்வு செய்தபோது அதில் மெத் ஆம்பெட்டமைன், ஹெராயின், கஞ்சா உள்ளிட்ட உயர் ரக போதைப் பொருட்கள் இருந்தன.
விசாரணையில் மண்டபம் சிங்காரத்தோப்பை சேர்ந்த இப் ராஹிம் பாதுஷா 29, அம்பலக்கார தெரு முகைதீன் பையாஸ் 27, கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் ராமநாதபுரம் நேரு நகரில் ஒருவரது வீட்டில் போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதையும் போலீசார் அறிந்தனர்.
ஆந்திராவில் இருந்து போதைப் பொருட்களை சாலை மார்க்கமாக சென்னை கொண்டு வந்துள்ளனர். அங்கிருந்து மினி வேனில் மண்டபம் கொண்டு சென்ற போது சிக்கினர். 19 கிலோ மெத் ஆம்பெட்டமைன், 10 கிலோ ஹெராயின், 219 கிலோ கஞ்சா பிடிப் பட்டது.
இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.300 கோடி என போலீசார் தெரிவித்தனர். இதில் முக்கிய குற்ற வாளியான மண்டபம் சேக் ரகுமானை போலீசார் தேடி வருகின்றனர்.

