திருப்பி அனுப்பப்பட்டார் டி.எஸ்.பி., கிருஷ்ணமூர்த்தி
திருப்பி அனுப்பப்பட்டார் டி.எஸ்.பி., கிருஷ்ணமூர்த்தி
ADDED : அக் 17, 2024 01:34 AM
சென்னை:மாநில மனித உரிமை கமிஷன் புலனாய்வு பிரிவுக்கு நியமிக்கப்பட்ட, புதிய டி.எஸ்.பி., திருப்பி அனுப்பப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் செயல்படும், மாநில மனித உரிமை கமிஷனில், புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி.,யாக சுந்தரேசன் என்பவர் பணிபுரிந்து வந்தார்.
காஞ்சிபுரத்தில் ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் கஸ்துாரி கொலை, கைதிகள் சித்ரவதை, சென்னையில் நடந்த மூன்று என்கவுன்டர்கள் குறித்து விசாரித்து, அவர் கமிஷனுக்கு அறிக்கை அளித்தார்.
இந்நிலையில், அவர் திடீரென மாநில மனித உரிமை கமிஷனில் இருந்து, மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவர் கமிஷனுக்கு அளித்த அறிக்கை எல்லாம் அரசுக்கு பாதகமாக இருந்ததால் மாற்றப்பட்டதாக, தகவல் வெளியானது.
அதைத் தொடர்ந்து, சிறைத்துறை விஜிலென்ஸ் பிரிவில், மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த டி.எஸ்.பி., கிருஷ்ணமூர்த்தி, மாநில மனித உரிமை கமிஷனுக்கு மாற்றப்பட்டார்.
ஆனால், அவரை பணியில் சேர விடாமல், திருப்பி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. தற்போது, அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.