sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இந்த காரணத்தால் மட்டும் அரசுக்கு 1,100 கோடி ரூபாய் வரை இழப்பு: ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை

/

இந்த காரணத்தால் மட்டும் அரசுக்கு 1,100 கோடி ரூபாய் வரை இழப்பு: ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை

இந்த காரணத்தால் மட்டும் அரசுக்கு 1,100 கோடி ரூபாய் வரை இழப்பு: ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை

இந்த காரணத்தால் மட்டும் அரசுக்கு 1,100 கோடி ரூபாய் வரை இழப்பு: ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை

31


UPDATED : டிச 01, 2024 06:10 AM

ADDED : நவ 30, 2024 07:39 AM

Google News

UPDATED : டிச 01, 2024 06:10 AM ADDED : நவ 30, 2024 07:39 AM

31


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'வழக்குகளில் ஆஜராகாமல் இருப்பது, ஒரு சில வழக்குகளை மட்டும் தேர்வு செய்து ஆஜராவது போன்ற செயலால், கடந்த சில ஆண்டுகளில், கல்வித்துறை சார்ந்த வழக்குகளால் அரசுக்கு 1,100 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது' என்று வழக்கு விசாரணையின் போது சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

மணல் குவாரிகளில் நிர்ணயித்த அளவுக்கும் அதிகமாக மணல் எடுத்து விற்பனை செய்ததாகவும், அதில் கிடைத்த வருவாயை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும், புகார் எழுந்தது. இது குறித்து, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி, ஆவணங்களை கைப்பற்றியது. விசாரணைக்கு ஆஜராகும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை, 'சம்மன்' அனுப்பியது.

இதை எதிர்த்து, பொதுத்துறை செயலர், நீர்வளத்துறை கூடுதல் செயலர், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலுார் மற்றும் வேலுார் மாவட்ட கலெக்டர்கள் சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை சம்மனுக்கு தடை விதித்தது. தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. மனு மீதான விசாரணையின் போது, அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக, கலெக்டர்கள் மற்றும் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இவ்வழக்கு மீண்டும் உயர் நீதிமன்ற விசாரணைக்கு திருப்பி அனுப்பப்பட்டு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வில், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் யாரும் ஆஜராகவில்லை.

அதனால், அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், வழக்கு தொடர்ந்திருந்த தமிழக பொதுத்துறை செயலரை ஆஜராகும்படி உத்தரவிட்டனர். அதன்படி, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வில், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, பொதுத்துறை செயலர் ரீட்டா ஹரிஷ் தக்கர் ஆஜரானார்.

இதன்பின், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி வாதாடியதாவது: நேற்று முன்தினம் எவரும் ஆஜராகாததற்கு மன்னிப்பு கோருகிறோம். பண மோசடி விவகாரங்களில் அமலாக்கத்துறையுடன் இணைந்து செயல்பட, மாநில அரசு உறுதி பூண்டுள்ளது. ஆனால், பழிவாங்கும் நோக்குடன் வழக்குகள் இருக்கக்கூடாது.

மாநில அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில், அரசின் ஒப்புதல் இல்லாமல், அமலாக்கத்துறை தலையிடும் அதிகாரம், கூட்டாட்சியின் அடிப்படை கட்டமைப்பை மீறுவதாகும். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், அடுத்த கட்ட நகர்வு பற்றி, பொதுத்துறை தேவையான சட்ட ஆலோசனைகளை பெற, அவகாசம் வழங்க வேண்டும். விசாரணையை தள்ளிவைக்க வேண்டும். இவ்வாறு அவர் வாதாடினார்.

அதை ஏற்ற நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர், அடுத்த முறை, பொதுத்துறை செயலர் ஆஜராகுவதில் இருந்தும் விலக்களித்தனர்.

நடவடிக்கை அவசியம்

விசாரணையின் போது, நீதிபதிகள் கூறியதாவது: வழக்கு விசாரணையில், அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகாதது ஏற்புடையதல்ல. சட்ட அதிகாரிகளான வழக்கறிஞர்கள், வழக்குகளை தேர்வு செய்து, அந்த வழக்குகளில் மட்டுமே ஆஜராக ஆர்வம் காட்டுகின்றனர். அதுமட்டுமின்றி, நீதிமன்றத்துக்கு தவறான தகவல்களையும் தெரிவிக்கின்றனர்.இந்தச் செயலால், பொதுமக்கள் தான் அதிகம் பாதிப்படைவர். பணியில் தவறு செய்யும் அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதுபோல, தன் கடமையில் இருந்து விலகும் அரசு வழக்கறிஞர்களின் செயல்பாடுகளை கண்காணித்து, அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியான வழக்கறிஞர்களை நியமனம் செய்வது தொடர்பாக, தலைமை செயலரின் கவனத்துக்கு, பொதுத்துறை எடுத்துச் செல்ல வேண்டும். உதாரணமாக, வழக்குகளில் ஆஜராகாமல் இருப்பது, ஒரு சில வழக்குகளை மட்டும் தேர்வு செய்து ஆஜராவது போன்ற செயலால், கடந்த சில ஆண்டுகளில், கல்வித்துறை சார்ந்த வழக்குகளால் அரசுக்கு 1,100 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us